போலீசில் பொய் வழக்கு பதிவு கண்டித்து திருநங்கையர் மனு

கோவை:கோவை நகரிலுள்ள காட்டூர் மற்றும் பெரியகடைவீதி போலீஸ் ஸ்டேஷன்களில், திருநங்கைகள் மீது பொய்வழக்கு பதிவு செய்து, கைது செய்ததை கண்டித்து, நேற்று கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை பெரியகடைவீதி மற்றும் காட்டூர் போலீஸ் ஸ்டேஷன்களில் வழிப்பறி, விபச்சாரம் உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்து, திருநங்கைகளை கைது செய்து சிறையில் அடைத்ததை கண்டித்து, நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, திருநங்கைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கலெக்டர் பவன்குமாரையும், போலீஸ் துணை கமிஷனர் தேவநாதனையும் சந்தித்து, மனு கொடுத்தனர். திருநங்கைகளின் அமைப்பான, 'கோயமுத்துார் மை சொசைட்டி டிரஸ்ட்' தலைவி சோனியா நாயக் கூறியதாவது:

கோவை மாநகர போலீசார், சமீபகாலமாக திருநங்கைகள் மீது அடக்குமுறையை கையாண்டு வருகின்றனர். திருநங்கைகளை வைத்து கட்டபஞ்சாயத்து செய்கின்றனர்; பொய்வழக்கு பதிவு செய்து கைது செய்கின்றனர்.

ஆனால் திருநங்கைகளின் வாகனம் தொலைந்து விட்டது போன்ற புகார்களை கொடுத்தால் அதற்கு சி.எஸ்.ஆர்.நகல் மட்டுமே கொடுக்கின்றனர் எப்.ஐ.ஆர்.பதிவு செய்வதில்லை விசாரணையும் மேற்கொள்வதில்லை. இந்த நிலை நீடிக்கக்கூடாது.

எங்கள் சுதந்திரத்தை பறிக்காதீர்கள்; எங்களை வாழவிடுங்கள். நாங்களும் சகமனிதர்களே.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement