ரயிலில் தவறவிட்ட நகையை பதுக்கிய ஊழியர் சிக்கினார்

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி சரஸ்வதி, 59; ஐ.டி., நிறுவனங்களுக்கு ஆடிட்டிங் பார்த்து வருகிறார். சென்னையில் இருந்து கும்பகோணத்துக்கு, உழவன் எக்ஸ்பிரஸ் ஏசி பெட்டியில், நேற்று முன்தினம் அதிகாலை, சரஸ்வதி தன் குடும்பத்துடன் பயணித்த போது, 13 சவரன் நகையை பர்சில் வைத்து, அதை பையில் வைத்திருந்தார்.

கும்பகோணத்தில் இறங்கிய போது, பையை எடுக்க மறந்தார். ரயில் சென்ற பின், பையை மறந்து விட்டதை அறிந்து, கும்பகோணம் ரயில்வே போலீசில் விபரத்தை கூறினார். பாபநாசத்தில், ரயில்வே போலீசார் ரயிலில் சோதனை செய்தனர். அங்கு சரஸ்வதியின் பை இருந்துள்ளது; ஆனால், அதில் நகை இல்லை. ரயில்வே இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரித்தார்.

ஏசி ரயில் பெட்டியில் பணியாற்றி வரும் ஒப்பந்த பணியாளர்களிடம் விசாரித்ததில், திருச்சி, இனாம்குளத்துாரைச் சேர்ந்த மகேந்திரன், 31, என்ற ஊழியர் நகையை எடுத்தது தெரியவந்தது. ரயில்வே போலீசார், அவரை நேற்று கைது செய்தனர்.

Advertisement