ஊழல் திட்டமாக மாறி வரும் 100 நாள் வேலை திட்டம் ராமதாஸ் குற்றச்சாட்டு

2

சென்னை: நுாறு நாள் வேலை திட்டம், ஊழல் திட்டமாக மாறி விட்டதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழகத்தில், 2024- - 25ம் ஆண்டில், நுாறு நாள் வேலை திட்டத்தை செயல்படுத்தியதில், 78,784 முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அதனால் 14 கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டு இருப்பதாகவும், சமூக தணிக்கையில் தெரியவந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

பணிக்கு வராதவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கானோருக்கு அவர்கள் செய்த பணியின் அளவு அதிகரித்து காட்டப்பட்டு, பணம் வழங்கப்பட்டதாக கணக்கு காட்டி சுருட்டப்பட்டு இருக்கிறது.

சிவகங்கை மாவட்டத்தில், கஞ்சிரங்கால் ஊராட்சியில் மட்டும், எந்த வேலையும் செய்யாத, 37 பேருக்கு, மொத்தம் 8.25 லட்சம் ரூபாய், அதாவது சராசரியாக ஒருவருக்கு, 22,297 ரூபாய் வீதம் வழங்கி, மோசடி செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம், விருதுநகர், திருவள்ளூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில், இத்தகைய மோசடிகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தை முறைகேடு இல்லாமல் செயல்படுத்தவே, சமூக தணிக்கை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அதில் தெரியவரும் முறைகேடுகள் மீது, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது, அரசின் கடமை.

ஆனால், தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதிலிருந்து, தமிழக அரசு, முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை பாதுகாக்க முயல்கிறது என்பது உறுதியாகியுள்ளது.

கிராம மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த கொண்டு வரப்பட்ட உன்னதமான திட்டம் தான், 100 நாள் வேலை திட்டம், இன்றைய ஆட்சியாளர்களால் ஊழல் திட்டமாக மாறியிருக்கிறது.

எனவே, இத்திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து, தமிழக அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். மோசடியில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement