மணமக்கள் பெயரைப் பார்த்தால் சங்கடம்: திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

89


சென்னை: ''மணமக்கள் பெயரைப்பார்த்தால் சங்கடமாக உள்ளது. பிறக்கும் குழந்தைகளுக்காவது தமிழில் பெயர் சூட்டுங்கள்,'' என திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

சென்னை கொளத்தூர் தி.மு.க., நிர்வாகி முரளிதரன் இல்ல திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்கள் மகேஷ்வர் - திவ்யகணபதியை வாழ்த்தி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:மணமக்கள் பெயரை பார்த்தால் எனக்கு கொஞ்சம் சங்கடமாக உள்ளது. தமிழ்ப்பெயர்களாக இல்லை. இருந்தாலும் பரவாயில்லை. பிறக்கும் குழந்தைளுக்கு அழகான தமிழ்ப்பெயர்களை சூட்டுங்கள் அதுதான் என் அன்பான வேண்டுகோள்.

குடும்ப கட்டுப்பாடு



குழந்தைகளை பெற்றுக் கொள்ள உடனடியாக அந்த காரியத்தில் இறங்கி விட வேண்டாம். பொறுத்து நிதானமாக, அளவோடு பெற்று வளமாக வாழ வேண்டும் என்பது தான் குடும்ப கட்டுப்பாடு பிரசாரம். அதை நாம் தொடர்ந்து கடைப்பிடித்த காரணத்தால் தான் தொகுதி மறுசீரமைப்பு வருகிறபோது எம்.பி., தொகுதி குறைக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஏற்க மாட்டோம்!



அப்படிப்பார்த்தால் நாம் அதிகம் பெற்றிருக்கலாம். நம்மை விட அதிகம் பெறக்கூடிய திறமை யாருக்கும் எந்த நாட்டுக்கும் எந்த மாநிலத்துக்கும் கிடையாது. ஏனெனில் நாமெல்லாம் தமிழர்கள். அதனால் தான் மும்மொழிக் கொள்கையை நாங்கள் ஏற்க முடியாது. இரு மொழிக்கொள்கை தான் வேண்டும் என்று சொல்லும் ஆற்றல் கொண்டிருக்கிறோம்.

தமிழ்ப்பெயர்



5 ஆயிரம் அல்ல 10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் நாங்கள் மும்மொழிக் கொள்கைக்கு கையெழுத்து போட மாட்டோம் என்று தெளிவாக சொல்லி இருக்கிறேன். பெற்றுக் கொள்ளும் குழந்தைக்கு அழகான தமிழ்ப்பெயர் சூட்டுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement