மான்களால் பாதிக்கும் விவசாயம்

பேரையூர் : பேரையூர் பகுதிகளில் விவசாய நிலங்களில் மான்கள் கூட்டம் கூட்டமாக வருவதால் விவசாய பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.

இப்பகுதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலை உள்ளது. இந்த மலையில் இருந்து பேரையூர், தும்மநாயக்கன்பட்டி, கீழப்பட்டி, சந்தையூர், மேலப்பட்டி, லட்சுமிபுரம், சாப்டூர், பழையூர் பகுதி விவசாய நிலங்களில் மான்கள் கூட்டம் கூட்டமாக உலா வருகின்றன. சாகுபடி செய்த பயிர்களை மேய்ந்து வருவதால் விவசாயிகள் பாதிப்படைகின்றனர்.

இதனால் இப்பகுதி விவசாயிகள் நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

விவசாயிகள் கூறுகையில், ''மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து வரும் மான்கள் இப்பகுதியில் துார்வாராத கண்மாய்களில் தஞ்சமடைகின்றன. இப்பகுதியில் சாகுபடி செய்துள்ள பயிர்களை உணவாக்கி, கண்மாய்களிலேயே தங்கி விடுகின்றன.

இவற்றை விரட்டினாலும் மலைப்பகுதிக்கு செல்வதில்லை. சில சமயங்களில் குடியிருப்பு பகுதிகளிலும் உலா வருகின்றன. வனத்துறையினர் மான்களை மலைப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement