கேரள கல்லுாரியில் மோதல் மிசோரம் மாணவர் கொலை

திருவனந்தபுரம்,: கேரளாவில், இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்கள் இடையே மது போதையில் ஏற்பட்ட தகராறில், சக மாணவர் ஒருவர் கத்தியால் குத்தியதில், மிசோரம் மாணவர் உயிரிழந்தார்.

கேரளாவில் திருவனந்தபுரத்தின் அருகே நகரூரில் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரி இயங்கி வருகிறது.

இங்குள்ள கல்லுாரி விடுதியில் வடகிழக்கு மாநிலமான மிசோரமைச் சேர்ந்த வேலன்டைன், 23, மற்றும் லம்சங் ஸ்வாலா, 23, ஆகிய இருவரும் பி.டெக்., நான்காம் ஆண்டு படித்து வந்தனர். இவர்கள் இருவரும், சக மாணவர்களுடன் இணைந்து கல்லுாரி வளாகம் அருகே நேற்று முன்தினம் மது அருந்தினர்.

அப்போது வேலன்டைன் மற்றும் லம்சங் இடையே தகராறு ஏற்பட்டது. இது, மோதலாக மாறிய நிலையில், லம்சங் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், வேலன்டைனை குத்தினார். இதில், படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

அருகில் இருந்தோர், உடனே வேலன்டனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள், அவருக்கு முதலுதவி அளித்த நிலையில், மேல்சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி வேலன்டைன் உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கத்தியால் குத்திய லம்சங்கை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement