அரை நிர்வாணமாக ரோட்டில் கிடந்த  பெண் சாவில் உறவினர்கள் சந்தேகம்

ஹாசன்: ஹாசன், ஹிரேகெரூர் தாலுகாவில் உள்ள கோடா கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரவ்வா நிங்கப்பா சன்னதம்மனவரா, 45. இவர் அங்கன்வாடியில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவருடைய கணவர் இறந்து விட்டார்; பிள்ளைகள் கிடையாது; தனிமையில் வாழ்ந்து வந்தார்.

இவர் சமீப காலமாக அதே பகுதியை சேர்ந்த கடிகெப்பா என்பவருடன் நெருங்கி பழகி வந்து உள்ளார். இதனால், உறவினர்கள் கண்டித்தனர். ஆனால், அவர் பொருட்படுத்தவில்லை.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன் கண்காட்சிக்கு செல்வதாக உறவினர்களிடம் கூறி விட்டு வெளியேறினார். ஆனால், அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், சந்தேகமடைந்த உறவினர்கள் அவரை தேடினர். இறுதியில் போலீசில் புகார் செய்தனர்.

விசாரணையில், ஹாவேரி மாவட்ட அரசு மருத்துவமனையில், இறந்த பெண்ணின் உடல் உள்ளது என்ற தகவல் கிடைத்தது. உறவினர்கள், அங்கு சென்று பார்த்தனர். அவர் தான், பக்கிரவ்வா என அடையாளம் காண்பித்தனர்.

விசாரணையில், 'கடந்த 15 ம் தேதி, நகரின் புறநகர் பகுதியில் உள்ள துர்கா தேவி கோவில் அருகே, சாலையில் அரை நிர்வாணமாக, உயிருக்கு ஊசலாடும் வகையில் காணப்பட்டார். இதை பார்த்த கோவில் பூஜாரி, அரசு மருத்துவமனைக்கு தகவல் கொடுத்தார். மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டார். எட்டு நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்' என தெரிய வந்தது.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த, பெண்ணின் உறவினர்கள், 'இது இயற்கை மரணம் அல்ல பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம்' என போலீசிடம் சந்தேகம் தெரிவித்து உள்ளனர்.

Advertisement