மனைவியை பற்றி தவறாக பேசியவரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை ரத்து

பெங்களூரு: மனைவியை பற்றி தவறாக கூறியவரை குத்தி கொன்றவருக்கு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, உயர் நீதிமன்றம் ரத்து செய்து உள்ளது.

ராம்நகரின் கனகபுரா உனசமாரனஹள்ளி கிராமத்தின் மெஹபூப் பாஷா. இவர் கடந்த 2015 ம் ஆண்டு ஜூன் 18 ம் தேதி மனைவியுடன், கனகபுராவில் உள்ள ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார்.

அப்போது அங்கு வந்த சிக்கந்தர் என்பவர், மெஹபூப் பாஷா மனைவியை கேலியும், கிண்டலும் செய்தார். 'உனது மனைவிக்கும், எனக்கும் தொடர்பு உள்ளது; நீ தினமும் வேலைக்கு சென்றதும் உன் வீட்டிற்கு நான் வந்து செல்கிறேன்' என்று மெஹபூப் பாஷாவிடம், சிக்கந்தர் கூறினார்.

இதனால் கோபம் அடைந்த கணவர், தன் மனைவியை பற்றி தவறாக பேச வேண்டாம் என்று எச்சரித்தார். ஆனால் சிக்கந்தர் கேட்கவில்லை. இதனால் அவரை கத்தியால் குத்தி மெஹபூப் பாஷா கொலை செய்தார். அவரை, கனகபுரா போலீசார் கைது செய்தனர். ராம்நகர் 2 வது கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 2018 ம் ஆண்டு ஜூலை 13 ம் தேதி, மெஹபூப் பாஷாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

இதனை எதிர்த்து, அவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதி சூரஜ் விசாரித்தார்.

மனுக்கள் மீதான விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி நேற்று தீர்ப்புஅளித்தார்.

இறந்தவரிடம் தனது மனைவியை பற்றி தவறாக பேச வேண்டாம் என்று மனுதாரர் பல முறை கூறியும் அவர் கேட்கவில்லை.

இதனால் கோபம் அடைந்த மனுதாரர், அந்நவரை கத்தியால் குத்தி கொன்றார். இருவருக்கும் இடையிலான சந்திப்பு தற்செயலாக நிகழ்ந்தது.

கொலையை முன்கூட்டியே திட்டமிட்டு செய்யவில்லை. வாய் தகராறில் கண் இமைக்கும் நேரத்தில் கொலை நடந்து உள்ளது.

மற்றவர்கள் முன்பு தனது மனைவியின் நடத்தை குறித்து ஒருவர் விமர்சித்து பேசும் போது, உணர்ச்சிவசப்படுவது இயல்பானது.

மனுதாரர் ஏற்கனவே ஆறரை ஆண்டுகள் சிறையில் இருந்து உள்ளார். அவருக்கு இந்த தண்டனையே போதுமானது. அவருக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த, ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது. அவரை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறினார்.

Advertisement