பசவண்ணரை கலாசார தலைவராக அறிவித்தோம் லிங்காயத் மடாதிபதிகள் முன்பு சித்து பெருமிதம்

பெங்களூரு: ''காங்கிரஸ் அரசு தான் பசவண்ணரை கலாசார தலைவராக அறிவித்தது,'' என்று, லிங்காயத் மடாதிபதிகள் முன்பு, முதல்வர் சித்தராமையா பெருமையாக கூறினார்.

பெங்களூரு காவேரி இல்லத்தில் முதல்வர் சித்தராமையாவை, தொழில் அமைச்சர் எம்.பி.பாட்டீல் தலைமையில், லிங்காயத் சமூக மடாதிபதிகள், எம்.எல்.ஏ.,க்கள் நேற்றுசந்தித்து பேசினர்.

பட்ஜெட்டில் 100 கோடி



லிங்காயத் சமூகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கடிதம் கொடுத்தனர்.

கடிதத்தில், 'நாட்டின் கலாசார தலைவராக பசவண்ணரை அறிவித்ததற்கு நன்றி. அவரது சித்தாத்தங்களை மக்களிடம் திறம்பட கொண்டு செல்ல, பட்ஜெட்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்.

பெங்களூரு விமான நிலைய சாலையில்பசவண்ணரின் சிலையை நிறுவ வேண்டும்.

பெங்களூரில் சரண் தரிசனம் மையம் நிறுவப்பட வேண்டும். அங்கு தோட்டம், நுாலகம், விருந்தினர் மாளிகை கட்டப்பட்டு சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும்.

பசவகல்யாணில் கட்டப்பட்டு வரும் அனுபவ மண்டபத்தை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள, அங்கு பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மையம் நிறுவ வேண்டும்.

மாவட்ட தலைநகரில்பசவபவன் கட்ட வேண்டும். அங்கு கன்னட, கலாசார துறையால் கலாசார நிகழ்ச்சிகள்' என்பது உட்பட பல கோரிக்கைகள் இடம் பெற்று இருந்தன.

பின், சித்தராமையா பேசியதாவது:

பசவ ஜெயந்தி அன்று, முதல் முறையாக நான் முதல்வராக பதவிஏற்றேன்.

அரசு அலுவலகங்களில் பசவண்ணர் உருவப்படம் வைக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கியது காங்கிரஸ் அரசு தான்.

பசவண்ணரின் கருத்துகளும், போராட்டங்களும் மதசார்பற்ற சமூகத்தை கட்டி எழுப்ப உகந்தவை. ஆனால் அவரது கருத்துகள் சிலருக்கு பிடிக்காது.

ஜாதி அமைப்பு, இன்று சமூகத்தில் ஆழமாக வேரூன்றி உள்ளது. அதிகாரிகள் இதற்கு தண்ணீர் ஊற்றி உரமிடுகின்றனர்.

பசவண்ணர்,அம்பேத்கர் கருத்துகள்அரசியல் அமைப்பில்ஆழமாக உள்ளன. அனுபவ மண்டபத்தை மீண்டும் கட்டி எழுப்ப, நாங்கள் முயற்சி எடுத்து உள்ளோம்.

அனுபவ மண்டபம் முதல் ஜனநாயக தளம். பசவண்ணரை கலாசார தலைவராக அறிவித்ததும் காங்கிரஸ் அரசு தான். பசவ தத்துவம், வசன கலாசாரத்தை வெளிப்படுத்துவதில் எங்கள் அரசு உறுதி பூண்டு உள்ளது.

இவ்வாறு அவர்பேசினார்.

Advertisement