எம்.எல்.ஏ.,க்கள் 'குட்டி துாக்கம்' வாடகைக்கு 15 சாய்வு நாற்காலி

பெங்களூரு: ''சட்டசபை கூட்டத்தொடரின் உணவு இடைவேளையில், உறுப்பினர்கள் 'குட்டி துாக்கம்' போட வெளியே செல்வதை தவிர்க்க, வாடகைக்கு சாய்வு நாற்காலி வைக்கப்படும்,'' என சட்டசபை சபாநாயகர் காதர் தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

மார்ச்சில் நடக்கும் சட்டசபை கூட்டத்தொடரில், எம்.எல்.ஏ.,க்கள் தாமதமாக வருவதை தடுக்கவும், காலை மற்றும் மதிய வேளையில் எம்.எல்.ஏ.,க்கள் வெளியே செல்வதை தவிர்க்கவும் காலை சிற்றுண்டியும், மதியம் உணவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதனால் அவர்கள் கூட்டத்தொடரில் முறையாக பங்கேற்கலாம். இந்த நடைமுறை கடந்த மூன்று நான்கு கூட்டத்தொடரில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதுபோன்று, மதிய உணவு சாப்பிட்ட பின், சில உறுப்பினர்கள், சிறிது நேரம் 'குட்டி துாக்கம்' போட வெளியே செல்கின்றனர். இதை தவிர்க்க, சட்டசபை வளாகத்தில் 15 சொகுசு சாய்வு நாற்காலிகள், வாடகைக்கு வாங்கப்படும்.

பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டு முழுதும் நடக்க போவதில்லை. எனவே தான் வாடகைக்கு வாங்கப்பட உள்ளது. கூட்டத்தொடர் முடிந்த பின், அதற்குரிய கட்டணம் செலுத்தப்படும்.

கடந்தாண்டு ஜூலையில் நடந்த கூட்டத்தொடரின் போது, மாடலுக்காக ஒரு சாய்வு நாற்காலி வைக்கப்பட்டிருந்தது.

கூட்டத்தொடரில் எம்.எல்.ஏ.,க்கள் வருகை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement