துாத்துக்குடியில் பெண் கூட்டு பலாத்காரம்; கத்திமுனையில் போதை நபர்கள் கொடூரம்

2

துாத்துக்குடி: கோவில்பட்டியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை, கத்திமுனையில் மிரட்டி, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.


துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த 20 வயது பெண், தன் 10 மாத கைக்குழந்தையுடன், 18ம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்தார்.


நள்ளிரவில், அத்துமீறி வீட்டுக்குள் புகுந்த இரு போதை வாலிபர்கள், அப்பெண்ணை தாக்கியுள்ளனர். குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய அவர்கள், பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். 'வெளியே சொன்னால் குழந்தை உட்பட குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்து விடுவோம்' என, மிரட்டியுள்ளனர்.


பாதிக்கப்பட்ட பெண், அதிர்ச்சியில் வீட்டுக்குள் முடங்கினார். அவர் சோகமாக இருப்பதை பார்த்த உறவினர்கள், கேரளாவில் உள்ள அவரது கணவருக்கு தெரிவித்தனர். உடனடியாக ஊர் திரும்பிய கணவரிடம் அப்பெண் நடந்த விபரங்களை கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், கோவில்பட்டி மேற்கு போலீசில் புகார் அளித்தார்.


கோவில்பட்டி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் பிரேமா விசாரணையை துவக்கினார். இதில், இந்த கொடூரத்தில் ஈடுபட்டது சாலைப்புதுாரைச் சேர்ந்த மாரியப்பன், 28, நாகலாபுரத்தைச் சேர்ந்த மாரி செல்வம், 27, என, தெரியவந்தது.


வீரவாஞ்சி மலைப்பகுதியில் பதுங்கியிருந்த மாரியப்பனை போலீசார் பிடிக்க சென்றனர். அப்போது தப்பியோட முயன்ற அவர் கீழே விழுந்ததில் அவரது வலது கால், கையில் முறிவு ஏற்பட்டு, மாவுக்கட்டு போடப்பட்டது.


புதுக்கோட்டையில் பதுங்கியிருந்த மாரிசெல்வத்தை போலீசார் கைது செய்ய முயன்றனர். எஸ்.ஐ., ராஜபிரபு, போலீஸ் பொன்ராம் ஆகியோரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முயன்றார்.


அவரது இடது காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். அவர் துாத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டுள்ளார்.

Advertisement