தேசிய திருவிழாவாக திகழும் கும்பமேளா: ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பாராட்டு

3

திருச்சி: ''இந்திய ஒருமைப்பாட்டுக்கும், கலாசார பாரம்பரியத்திற்கும், சேவை மனப்பான்மைக்கும் சிறந்த உதாரணமாக, தேசிய திருவிழாவாக கும்பமேளா நடைபெறுகிறது,'' என, ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.

உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெறும் மஹா கும்பமேளாவில் பங்கேற்ற, காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நேற்று முன்தினம் இரவு, தனி விமானத்தில் திருச்சி வந்தார். அவர் கூறியதாவது:

நம் கோயில்களில் பட்ஷகங்கா, சிவகங்கா, புஷ்கரணி, அக்னி தீர்த்தம் போன்றவற்றில் புனித நீராடுகிறோம். ஹரித்துவார், உஜ்ஜயினி, நாசிக், பிரயாக்ராஜ் போன்ற இடங்களில் மஹா கும்பமேளா நடைபெறுகிறது.

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், போகி தினத்தன்று துவங்கி, சிவராத்திரி வரை நடைபெறும் கும்பமேளா விசேஷமானது.

பிரயாகம் என்பது மிக உயர்ந்த யாகம். கங்கை என்பது ஓங்காரத்தின் உருவம். கங்கை, யமுனை, சரஸ்வதி மூன்றும் சேர்ந்து ஓங்காரத்தின் உருவமாக திகழ்வதால், அதில், புனித நீராடுவதால் தெரிந்தோ, தெரியாமலோ செய்த தோஷங்கள் நீங்கும். உயர்ந்த புண்ணியம் கிடைக்கும் என்று,வேதம் சொல்கிறது.

வேதத்தில், கங்கையின் சிறப்பு சொல்லப்பட்டுள்ளது. வேதம் என்பது எழுதா கிழவி; இறைவனின் மூச்சுக்காற்றாகவும் திகழ்கிறது. சரஸ்வதி நதியில் நீராடினால் புகழ் கிடைக்கும்.

பொதுவாக, ஆறுகள் கடலில் கலக்கும். ஆனால், மக்கள் கடல் ஆறுகளில் கலப்பது தான் கும்பமேளா.

தற்போது நிகழ்ந்த கும்பமேளாவில், 52 கோடி மக்கள் புனித நீராடி உள்ளதாக, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.மக்கள் மனதில் பக்தி நெறி ஆழமாக வேரூன்றி இருப்பதை எடுத்துக்காட்டும் விதமாக, கோடான கோடி மக்களை நேரடியாக கும்பமேளாவில் காண முடிகிறது. இந்த கும்பமேளாவில் தென்னாட்டில் இருந்தும், காசி தமிழ் சங்கம் மூலமாகவும் நிறைய பேர் பங்கு பெற்று, புனித நீராடி யாகங்கள் செய்துள்ளனர்.

இந்திய ஒருமைப்பாட்டுக்கும், கலாசார பாரம்பரியத்திற்கும், சேவை மனப்பான்மைக்கும் சிறந்த உதாரணமாக, தேசிய திருவிழாவாக கும்பமேளா நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement