தாலுகா போலீஸ் ஸ்டேஷன் காரியாபட்டியில் அமையுமா

காரியாபட்டி: காரியாபட்டியில் தாலுகா போலீஸ் ஸ்டேஷன் ஏற்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

காரியாபட்டியில் 150 ஆண்டுகளுக்கு முன் போலீஸ் ஸ்டேஷன் ஏற்படுத்தப்பட்டது. அப்போது இருந்த சூழ்நிலைக்கு பல்வேறு கிராமங்களை கவனிக்க முடிந்தது. மக்கள் தொகை அதிகரிப்பு, பேரூராட்சியின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இரு வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு கூடுதல் ஸ்டேஷன்கள் துவக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து காரியாபட்டி போலீஸ் ஸ்டேஷனில் சில கிராமங்கள், பேரூராட்சி கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 3 மாவட்டங்களை ஒட்டிய பகுதியாக காரியாபட்டி இருப்பதால் மற்ற பகுதிகளில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் இப்பகுதி வழியாக மற்ற பகுதிகளுக்கு எளிதில் தப்பி செல்கின்றனர். மக்கள் தொகை பெருக்கத்தால் தற்போது இருக்கிற போலீசாரால் கண்காணிக்க முடியாத நிலை உள்ளது. வேலை பளு காரணமாக பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

அது மட்டுமல்ல தற்போது காரியாபட்டியில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் துவக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான வழக்குகள் இங்கு நடத்தப்பட்டு வருகின்றன. கோர்ட் துவக்கப்பட்ட நிலையில் தாலுகா போலீஸ் ஸ்டேஷன் துவக்கப்பட்டால் கூடுதல் கவனம் செலுத்தி, பல்வேறு குற்ற சம்பவங்களை தடுக்க ஏதுவாக இருக்கும். வளர்ந்து வரும் ஊர்களில் காரியாபட்டி மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஆகவே தாலுகா போலீஸ் ஸ்டேஷன் ஏற்படுத்த மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Advertisement