தாசில்தார்களே மாணவர்களுக்கான சான்றுகள் வழங்க அறிவுறுத்தல்

ராஜபாளையம்: வி.ஏ.ஓ.,க்கள் உள்ளிட்ட வருவாய்த்துறையினரின் போராட்டத்தால் மாணவர்களுக்கு சான்றிதழ் பெறுவதில் பாதிப்பு குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக அத்தியாவசிய சான்றிதழ்களை தாசில்தாரே நேரடியாக ஒப்புதல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர் அருகே இ.குமாரலிங்கபுரம் கண்மாயில் கனிமவள கொள்ளையை தடுக்க தவறியதாக வருவாய்த் துறையினர் உள்ளிட்ட ஏழு பேர் மீது பிப்.12 ல் சஸ்பென்ட் செய்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் உத்திரவிட்டார். வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் மறுநாள் முதல் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகத்தின் பேச்சுவார்த்தையை அடுத்து வருவாய் துறையினர் போராட்டத்தை கைவிட்ட கையில் வி.ஏ.ஓ., க்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தை தொடர்கின்றனர். இதனால் நுழைவு தேர்வு உள்ளிட்டவைகளுக்கு சான்று பெறும் விஷயத்தில் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இது குறித்து மாணவர்கள் சிரமம் பற்றி தினமலர்நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக இருப்பிட சான்று, சாதி சான்று, ஓ.பி.சி சான்று, வருவாய் சான்று கோரிய மாணவர்களின் விண்ணப்பங்களுக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. இதனால் விண்ணப்பங்களுக்கு நேரடியாக தாசில்தார் ஒப்புதல்கள் வழங்கப்படுவதால் மாணவர்களின் பெற்றோர் சிக்கல் நீங்கி நிம்மதி அடைந்துள்ளனர்.

Advertisement