சஸ்பெண்ட் ரத்து போராட்டம் ஊதிய பிடித்த பட்டியல் கேட்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளை விவகாரத்தில் சஸ்பெண்டை கண்டித்து பேராட்டம் செய்த வருவாய்த்துறையினரின் ஊதியத்தை பிடித்த பட்டியல் கேட்டு தாசில்தார்களுக்கு டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

அரசு அலுவலகங்கள் செயல்பாட்டை பாதிக்கும் வகையில் எந்த விதமான போராட்டத்திலும் அரசு ஊழியர்கள் பங்கேற்பது நடத்தை விதிகளை மீறுவதாகும். அரசாங்கத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின் படி 'நோ ஒர்க் நோ பே' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு போராட்ட நாட்களுக்கு ஊதியம் வழங்க முடியாது.

கனிமவளக் கொள்ளை விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தாசில்தார் உட்பட 7 பேரின் சஸ்பெண்டை ரத்து செய்ய கோரி வருவாய்த்துறையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் மக்கள் சான்றுகள் பெறுவது, பட்டா மாறுதல் செய்வது போன்ற அத்தியாவசிய சேவைகளை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், மாற்று ஏற்பாடு செய்யக் கோரி கலையரசன் என்பவரால் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இதில் தங்கள் அலுவலக பணியாளர்களில் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட பணியாளர்களின் வேலை நிறுத்த நாட்களுக்கான ஊதியத்தை பிடித்தம் செய்யவும், ஊதியம் பிடிக்கப்பட்ட விபரத்துடன் அறிக்கையை தவறாமல் அனுப்பி வைக்க தாசில்தார்களிடம் டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் கேட்டுள்ளார்.

Advertisement