கடவுளிடமே 'கைவரிசை' ஆந்திர நபருக்கு '6 ஆண்டு'
திருத்தணி,
திருத்தணி முருகன் கோவிலில், கடந்தாண்டு, ஏப்., 21ம் தேதி, 40 வயதான நபர், வள்ளி மற்றும் தெய்வானை சன்னிதிகள் எதிரே வைக்கப்பட்டுள்ள உண்டியலில் காணிக்கை செலுத்துவது போல பாவனை காட்டி வந்தார்.
மறுநாளும் அதே நபர், மேற்கண்ட இரண்டு உண்டியல்கள் அருகில், காணிக்கை செலுத்துவது போல பாவனை செய்து சென்றது, கோவில் கண்காணிப்பு கேமரா வாயிலாக கண்டறியப்பட்டது.
திருத்தணி போலீசில் அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து, கேமராவில் பதிவான நபரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர், ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி, கோபாலபுரம் சித்தியாலா கிராமத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் சாமுவேல், 40, என, தெரிந்தது.
அவர், உண்டியலின் உட்பகுதியில் துணிப்பையை மறைத்து வைத்து, பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளை நுாதனமாக கொள்ளை அடித்தது விசாரணையில் தெரியவந்தது.
இவ்வழக்கு விசாரணை, திருத்தணி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று நடந்த விசாரணையில், உண்டியல் பணம் திருடுவது வீடியோ ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால், ஜேம்ஸ் சாமுவேலுக்கு, ஆறு ஆண்டுகள் சிறையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி முத்துராஜ் தீர்ப்பு வழங்கினார்.
அதை தொடர்ந்து, போலீசார் ஜேம்ஸ் சாமுவேலை சிறையில் அடைத்தனர்.