முன்னாள் ராணுவ வீரர்கள் குறை கேட்பு கூட்டம் நடத்த கோரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரியில் முன்னாள் ராணுவ வீரர்கள் குறை கேட்பு கூட்டத்தை கூட்ட வேண்டுமென, முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத்தாய்மார்கள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, சங்க தலைவர் மோகன் அறிக்கை:

புதுச்சேரியில் 1,600 முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத்தாய்மார்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை மற்றும் அரசின் மூலம் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தகுதி வாய்ந்தவர்களுக்கு அரசின் உதவிகள் முழுமையாக கிடைப்பதில்லை.

தமிழகத்தில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, கலெக்டர் தலைமையில் முன்னாள் ராணுவ வீரர்கள் குறை கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு, தீர்வு காணப்படுகிறது.

ஆனால், புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 40 ஆண்டுகளாக குறை கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை.

கடந்தாண்டு சங்க ஆலோசகர் அசோக்பாபு எம்.எல்.ஏ., முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை அமைச்சரை சந்தித்து, முன்னாள் ராணுவ வீரர்கள் குறை கேட்பு கூட்டம் நடத்த வேண்டுமென, கோரிக்கை வைத்தார்.

முதல்வர், இந்த கோரிக்கையை ஏற்று, முன்னாள் ராணுவ வீரர்கள் குறை கேட்பு கூட்டத்தினை, கலெக்டர் தலைமையில் உடனே கூட்டி, குறைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement