அரசு மருத்துவமனை கட்டடத்தில் அடிக்கடி இடிந்து விழும் கூரை

கமுதி: கமுதி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவு கட்டடத்தில் அடிக்கடி கூரையின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து சேதமடைகிறது.

கமுதி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள், வெளி நோயாளிகள், சித்த மருத்துவம், மகப்பேறு, எக்ஸ்ரே பிரிவு உட்பட தனித்தனி பிரிவாக செயல்படுகிறது. கமுதி அதனை சுற்றியுள்ள கோவிலாங்குளம், பசும்பொன், கோட்டைமேடு, புதுக்கோட்டை உட்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினந்தோறும் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

கமுதி தாலுகாவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்பி வைக்கின்றனர். கர்ப்பிணிகளும் பரிசோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இங்குள்ள அறுவை சிகிச்சை கட்டடத்தின் கூரை கடந்த சில மாதத்திற்கு முன்பு இடிந்து விழுந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழ் செய்து வெளியிட்டு சுட்டிக்காட்டியது. பிறகு முறையாக பராமரிப்பு செய்யாததால் தற்போது கூரையின் சிமென்ட் பூச்சுகள் இடிந்து விழுந்தது. அப்போது யாரும் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது, இதனால் மக்கள் அச்சமடைகின்றனர். அறுவை சிகிச்சை பிரிவு கட்டடத்தின் கூரை இடிந்து விழுவது தொடர்கிறது.

எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து கமுதி அரசு மருத்துவமனை கட்டடத்தை சீரமைத்து நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement