தொகுதி மறுசீரமைப்பு பற்றி ஸ்டாலின் சொல்வது பொய்: அமித் ஷா குற்றச்சாட்டு

55


கோவை: 'லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்கிறார். தமிழகத்தில் லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படாது' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட பா.ஜ., அலுவலகம் திறப்பு விழா பீளமேட்டில் நடந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர், வணக்கம் நமஸ்காரம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையை துவங்கினார்.


ஊழல் ஒழிக்கப்படும்




பின்னர் அவர் பேசியதாவது: 2025ம் ஆண்டு துவக்கம் டில்லி வெற்றியோட தான் துவங்குகிறது. 2026ம் ஆண்டு தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியோட தான் துவங்க போகிறது.
தி.மு.க.,வின் தேச விரோத ஆட்சி, மக்கள் விரோத ஆட்சி முடிவுக்கு வரும் நேரம் வந்துவிட்டது. 2026ல் தமிழகத்தில் நமது ஆட்சி உருவாக போவது உறுதி. தமிழகத்தில் உருவாக போகும் நமது ஆட்சி சாதாரண ஆட்சியாக இருக்காது, புதிய யுகத்தை உருவாக்குவதாக இருக்கும். வகுப்பு வாத சிந்தனை முடிவுக்கு கொண்டு வரப்படும். தமிழகத்தில் நிலவும் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.

சட்டம் ஒழுங்கு




தமிழகத்தில் இருக்கும் தேச விரோத சக்தி வேரோடு பிடுங்கி எறியப்படும். பிரதமர் மோடி பா.ஜ., ஆட்சி செய்யும் மாநிலத்தில் முத்திரையை பதித்து கொண்டு இருக்கிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேவலமான நிலையில், சீரழிந்து காணப்படுகிறது. பல்கலை உட்பட முக்கியான இடங்களில் கூட பெண்கள் பாதுகாப்பாக சென்று வரக் கூடிய சூழல் இல்லை. வேங்கைவயல் சம்பவத்தில் இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

மாஸ்டர் டிகிரி




2ஜி வழக்கு விசாரணை இன்னும் முடியவில்லை. தேச விரோத சிந்தனை தான் ஆட்சி கட்டிலில் இருக்கிறது. மணல் கொள்ளை கூட ஆட்சியாளர்களின் முழு அதிகாரத்தோடு நடந்து கொண்டு இருக்கிறது. ஊழல் செய்வதில் தி.மு.க., தலைவர்கள் மாஸ்டர் டிகிரி பெற்றுள்ளனர். லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்கிறார். தமிழகத்தில் லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படாது. தென்னிந்திய மக்களுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்குமே தவிர, குறையாது.

நிதி வழங்கவில்லையா?



பிரதமர் மோடி நிதி வழங்கவில்லை என முதல்வர் ஸ்டாலின் பொய்யான தகவலை கூறி வருகிறார். மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்பது பொய்யான தகவல். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வெறும் 1.52 லட்சம் கோடி தான் வழங்கப்பட்டது. பிரதமர் மோடி ஆட்சியில் தமிழகத்திற்கு ரூ.5 லட்சம் கோடி நிதி கொடுக்கப்பட்டு உள்ளது. நான் இங்கு உண்மையை கூறி உள்ளேன், நீங்கள் கட்டாயம் எனக்கு பதில் அளிக்க வேண்டும்.இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Advertisement