ஐ.ஆர்.பி.என்., போலீசார் 35 கி.மீ., அணிவகுப்பு செல்ல டி.ஜி.பி., உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி ஐ.ஆர்.பி.என்., பிரிவு போலீசார் மீதான தொடர் புகார் காரணமாக வாரந்தோறும் 35 கிலோ மீட்டர் அணிவகுப்பு செல்ல டி.ஜி.பி., உத்தரவு விட்டுள்ளார்.

புதுச்சேரியில் கடந்த 2005ம் ஆண்டு ஐ.ஆர்.பி.என்., பிரிவு உருவாக்கப்பட்டது.

இதில், 800க்கும் மேற்பட்ட ஐ.ஆர்.பி.என்., போலீசார் பணியாற்றி வருகின்றனர். போலீசாருக்கு வழங்கியது போல், ஐ.ஆர்.பி.என்.,களுக்கும் 10, 15, 25 என்ற விகிதத்தில் பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

அதன்படி, 2005ல் ஐ.ஆர்.பி.என்., பிரிவில் எஸ்.ஐ.,களாக பணியில் சேர்ந்த 6 பேர் உதவி கமாண்டன்டாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கிடையே, ஐ.ஆர்.பி.என்., போலீசார் மற்றும் அதன் உயரதிகாரிகள் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.

சமீபத்தில் டீக்கடை நடத்தி வந்த ஐ.ஆர்.பி.என்., உதவி கமாண்டன்ட் மற்றும் மற்றொரு அதிகாரி ஏனாம் மற்றும் மாகேவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

ஆனால், இருவரும் மருத்துவ விடுப்பு எடுத்து இதுவரை இடமாற்றம் செய்யப்பட்ட பணியிடத்திற்கு செல்லாமல் உள்ளனர். மேலும், தங்களுக்கு புதிய கார் மற்றும் உதவிக்கு சப் இன்ஸ்பெக்டர் வேண்டும் என கோரிக்கை விடுத்து போலீஸ் தலைமையகத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

இந்நிலையில், ஐ.ஆர்.பி.என்.,கள் சட்டம் ஒழுங்கு போலீசாருடன் இணைந்து பணியாற்றும்போது பல்வேறு பிரச்னைகளை உருவாக்குவதாகவும், ஐ.ஆர்.பி.என்., பிரிவு உருவாக்கப்பட்ட நாளிலிருந்து, இதுவரை வெளி மாநிலத்திற்கு சென்று எந்தவித பாதுகாப்பு பணியில் ஈடுபடாமல் இருப்பதாகவும், பல்வேறு புகார்கள் வந்தது.

இதனால், ஐ.ஆர்.பி.என்., போலீசார் வாரம் ஒருநாள், புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் வரை 35 கிலோ மீட்டர் துாரத்திற்கு நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என டி.ஜி.பி., ஷாலினி சிங் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வரும் 5ம் தேதி முதல் ஐ.ஆர்.பி.என்., போலீசார் திண்டிவனம் சென்று வர வேண்டும்:

இதற்கு ஐ.ஆர்.பி.என்., போலீசார் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தங்கள் 40 வயதை தாண்டி விட்டதால், பலருக்கும் நீரிழிவு, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட நோய்கள் உள்ளன. இதன் காரணமாக, அணி வகுப்பு மேற்கொள்ள முடியாது என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement