ஆன்லைனில் வெளிநாட்டு வேலை தேடிய வாலிபரிடம் ரூ.3.30 லட்சம் மோசடி

புதுச்சேரி: வெளிநாட்டில் வேலை வாய்ப்பு உள்ளதாக கூறி, காரைக்கால் வாலிபரிடம், ரூ. 3.30 லட்சத்தை மோசடி செய்த கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

காரைக்கால் பி.கே.சாலையை சேர்ந்தவர் முத்தழகன்.

இவர், ஆன்லைனில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பான விளம்பரத்தை பார்த்து,அதிலிருந்த மொபைல் எண்ணை வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது, எதிர்முனையில் பேசிய மர்ம நபர், கனடாவில் தங்களுக்குரிய வேலை இருப்பதாகவும், அந்த வேலைக்கு, விசா கட்டணம் செலுத்த வேண்டுமென கூறியுள்ளார். இதை நம்பிய முத்தழகன், அந்த மர்ம நபருக்கு ரூ. 3 லட்சத்து 30 ஆயிரத்து 360 அனுப்பி, ஏமாந்துள்ளார்.

இதே போல், நைனார்மண்டபம், வ.உ.சி., வீதியை சேர்ந்த சூர்யா என்பவரை, டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், வீட்டிலிருந்தபடி அதிக பணம் சம்பாதிக்கலாம் என, ஆன்லைன் வேலை குறித்து கூறியுள்ளார்.

இதை நம்பியசூர்யா, ரூ.79 ஆயிரம் பணத்தை செலுத்தி, ஏமாந்துள்ளார்.

இதே போல், ஆன்லைன் மோசடி கும்பலிடம், முதலியார்பேட்டையை சேர்ந்த ராஜசேகர் ரூ. 50 ஆயிரமும், லாஸ்பேட்டையை சேர்ந்த ராஜேஸ்வரி ரூ.35 ஆயிரத்து 900மும், மதகடிப்பட்டை சேர்ந்த ஜெயராஜ் ரூ. 40 ஆயிரமும், நல்லவாடு சுனாமி நகரை சேர்ந்த ராமிலா ரூ.18 ஆயிரத்து 450மும், காரைக்காலை சேர்ந்த ஜெயசூர்யா ரூ. 31 ஆயிரத்து 350ம் என, மொத்தம் 7 பேர், ரூ. 5 லட்சத்து 85 ஆயிரம் பணத்தை அனுப்பி, ஏமாந்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement