திருநள்ளாரில் சிவராத்திரி விழா தங்க ரிஷப வாகனத்தில் சாமி வீதியுலா

காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில், மகா சிவராத்திரியொட்டி நேற்று தங்க ரிஷப வாகனத்தில் தர்பாரண்யேஸ்வர் சுவாமி வீதியுலா நடந்தது.

திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரி விழாவை யொட்டி, நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு முதல்கால அபிஷேக பூஜை துவங்கியது.

இதில், தர்பையில் முளைத்த சுயம்புவான தர்பாரண்யேஸ்வர், செண்ப தியாகராஜர், பிரணாம்பிகை அம்பாள், சனீஸ்வர பகவான் ஆகியோருக்கு, பல வகை திரவியங்களால் அபிஷேகமும், ஆராதனையும் நடந்தது.

தொடர்ந்து, நேற்று காலை பிரணாம்பிகை அம்பாள் சமேதராக, தர்பாரண்யேஸ்வரர் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். பின், தெற்கு வீதி, வடக்கு வீதி என நான்கு வீதிகளில் சுவாமி வீதியுலா நடந்தது.

தருமபுர ஆதீனம் ஸ்ரீமந்த் கட்டளை தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement