வில்லியனுாரில் மும்பை மாணவர்களுக்கு சுடுமண் சிற்பம் செய்வதற்கு பயிற்சி

வில்லியனுார்: வில்லியனுாரில் மும்பை மாணவர்களுக்கு சுடுமண் சிற்பங்கள் செய்வது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

வில்லியனுார் அருகே கணுவாப்பேட்டை புதுநகரில் 'டெரகோட்டா' சுடுமண் சிற்பக்கலை மையம் உள்ளது. பத்மஸ்ரீ விருது பெற்ற சுடுமண் கலைஞர் முனுசாமி பயிற்சி அளித்து வருகிறார்.

இந்நிலையில் மும்பை சர்வதேச பள்ளியில் பயிலும் மாணவர்கள் கல்வி மற்றும் கலாச்சார பயணமாக புதுச்சேரிக்கு வந்துள்ளனர். பாரம்பரிய கலையான சுடுமண் சிற்பங்கள் செய்வது குறித்த பயிற்சியில் ஈடுபட்டனர்.

இது குறித்து முனுசாமி கூறியதாவது:

அழிவின் விளிம்பில் உள்ள களிமண் சிற்ப கலையை மீட்டெடுக்கும் வகையில் உள்ளூர், வெளிமாநில மாணவர்களுக்கு இந்த பயிற்சியை அளித்து வருகிறேன். அடுத்த தலைமுறைக்கு நமது கலையை கொண்டு செல்வது நமது கடமையாகும். இந்த மாணவர்களுக்கு ஒன்பது விதமான பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement