விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக உற்சவ விழா அதிகாரிகள் ஆலோசனை

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவ ஏற்பாடுகள் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். நேர்முக உதவியாளர் செல்வமணி வரவேற்றார்.

கூட்டத்தில், வரும் 3ம் தேதி மாசிமக பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, ஆறாம் நாள் உற்சவம், பஞ்சமூர்த்திகள் தேரோட்டம், மாசிமகம், தெப்பல் உற்சவம் உள்ளிட்ட விழாக்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவதால் பாதுகாப்பு, மின் விளக்குகள், சாலை வசதி, நான்கு மாட வீதிகளில் தேரோட்டத்திற்கு இடையூறான ஆக்கிரமிப்புகள் அகற்றுவது. சி.சி.டி.வி., கேமராக்கள் பொறுத்தி குற்ற நிகழ்வுகளை கண்காணிப்பது, மணிமுக்தாற்றில் பக்தர்கள் நீராடி உடைமாற்ற வசதியாக தற்காலிக அறைகள் அமைப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தாசில்தார் உதயகுமார், கோவில் செயல் அலுவலர் மாலா, இன்ஸ்பெக்டர்கள் ஜெயலட்சுமி, குணபாலன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் வசந்தபிரியா, மின் உதவி செயற்பொறியாளர் நாராயணசாமி, தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் தேவசூர்யா, வர்த்தகர் சங்கத் தலைவர் கோபு, செயலாளர் மணிவண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement