தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்கள், நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

1

சென்னை: தமிழகத்தில் இன்று (பிப்.,28) 11 மாவட்டங்களிலும், நாளை 6 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (பிப்., 28) கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.



அதேபோல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் நாளை ( மார்ச்., 01) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், மார்ச் 4ம் தேதி முதல் மார்ச் 6ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.



சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement