அடிமாலியில் பேரிடர் மீட்பு ஒத்திகை

மூணாறு : இடுக்கி மாவட்டம் அடிமாலி ஊராட்சியில் லட்சம் வீடு காலனியில் பேரிடர் காலங்களில் கையாளும் மீட்பு நடவடிக்கை குறித்து ஒத்திகை தத்ரூபமாக நடந்தது.

கேரளாவில் மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு, மண் மற்றும் நிலச்சரிவுகள் அதிகம் ஏற்பட்டு வருகின்றன. அதனை குறித்து கேரள உள்ளூர் நிர்வாக அமைப்பான ' கிலா' ஆய்வு நடத்தி பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளை கண்டறிந்தது. அப்பகுதிகளில் பேரிடர் காலங்களில் கையாள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தலைமையில் ஒத்திகை நடந்து வருகிறது.

அதன்படி தேவிகுளம் தாலுகாவில் மாங்குளம், ராஜாக்காடு, ராஜகுமாரி, வெள்ளத்தூவல், பைசன்வாலி, பள்ளிவாசல் ஆகிய ஊராட்சிகளை உட்படுத்தி அடிமாலி ஊராட்சியில் லட்சம் வீடு காலனியில் பேரிடர் ஒத்திகை நடந்தது. அங்கு பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சிகிச்சை அளிப்பது போன்று ஒத்திகை தத்ரூபமாக நடந்தது. அதற்கு 'சைரன்' ஒலி எழுப்பிய வகையில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்பட பல்வேறு வாகனங்கள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், வருவாய், தீயணைப்பு, சுகாதாரம், போலீஸ் உள்பட பல்வேறு துறையினர் ஒத்திகையில் பங்கேற்றனர்.

Advertisement