'இளைஞர்களின் சக்தியும், நம்பிக்கையும் தான்  விக்சித் பாரத் 2047 இலக்குக்கு முக்கிய காரணி'

தஞ்சாவூர்: ''இளைஞர்களின் சக்தியும், நம்பிக்கையும் தான், 'விக்சித் பாரத் 2047' இலக்கை அடைவதற்கு முக்கிய காரணிகளாக உள்ளன,'' என, இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.


தஞ்சாவூர், சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலையில், தேசிய அறிவியல் தின 2025ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.


விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கி பேசியதாவது: இளைஞர்களின் சக்தியும், நம்பிக்கையும் தான் விக்சித் பாரத் 2047 இலக்கை அடைவதற்கு முக்கிய காரணிகளாக உள்ளன. நம் நாட்டில் அறிவுசார் சொத்துக்களை உருவாக்குவது அவசியம்.


நம் நாட்டில் வலுவான கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவோர் சூழலை உருவாக்குவதால், அறிவுசார் சொத்துக்களை தக்கவைத்து, புதிய அறிவை செல்வமாக மாற்ற முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.


திருச்சி பாரதிதாசன் பல்கலைப் பேராசிரியர் பழனி ஆண்டவருக்கு, சாஸ்த்ரா சி.என்.ஆர்.ராவ் விருது, பெங்களூரு ராமன் ஆராய்ச்சி நிறுவனப் பேராசிரியர் தருண் செராதீப்புக்கு சாஸ்த்ரா ஜி.என்.ராமச்சந்திரன் விருது, மொஹாலி இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனப் பேராசிரியர் பிரசாத்துக்கு சாஸ்த்ரா ஒபைத் சித்திக் விருது, பெங்களூரு இந்திய மேலாண்மை நிறுவனப் பேராசிரியர் மகாதேவனுக்கு சாஸ்த்ரா மஹாமனா விருது என விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், 2024ம் ஆண்டுக்கான சாஸ்தரா ஒபைத் சித்திக் விருது, உயிரியல் அறிவியலுக்கான தேசிய மையப் பேராசிரியை உமா ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.


இவ்விழாவில் சாஸ்த்ரா துணைவேந்தர் வைத்தியசுப்பிரமணியம், திட்டம் மற்றும் மேம்பாடு முதன்மையர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


நம் நாடு சுதந்திரம் பெற்று, 100வது ஆண்டான 2047க்குள் நம் இந்திய நாட்டை வளர்ந்த நாடாக மாற்றும் மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வை விக்சித் பாரத் 2047 ஆகும்.

இதை வலியுறுத்தி, இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் பேசியது உத்வேகத்தை அளிப்பதாக உள்ளது என பலர் கருத்து கூறினர்.

Advertisement