சின்னமனூர் சின்ன வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்ற தலைமை பொறியாளர் உத்தரவு

சின்னமனூர் : சின்னமனூர் சின்ன வாய்க்கால் கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற உடனே அளவீடு செய்யும் பணியை துவக்குங்கள் என மதுரை மண்டல தலைமை பொறியாளருக்கு நீர்வளத்துறை தலைமை பொறியாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.

முல்லைப் பெரியாறு பாசனத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இருபோக பாசனத்திற்கு 17 வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த வாய்க்கால்கள் பெரும்பாலும் தூர்வாரப்படாமல் செடி, கொடி வளர்ந்தும், மண்மேவி மேடாகியும், ஆக்கிரமிப்பில் சிக்கியும் உள்ளது.

சின்னமனூர் சின்ன வாய்க்கால் நெடுஞ்சாலையை ஒட்டி அமைத்துள்ளதுள்ளதால் 8 கி.மீ. நீள வாய்க்கால் இரு புறமும் கரைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் விளைபொருள்களை கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது.

சாக்கடை கழிவு நீர் முழுவதும் இந்த வாய்க்காவில் திருப்பி விடப்படுகிறது. கரைகள் சேதப்படுத்தப்படுகிறது.

சின்ன வாய்க்கால் ஆக்கிரமிப்புக்களை அகற்ற கடந்த சில ஆண்டுகளாக சின்னமனூர் நன்செய் பட்டதார் விவசாயிகள் சங்கம் போராடி வருகிறது. ஆனால் நீர்வளத்துறை கண்டுகொள்ளாமல் , வருவாய்த்துறை அளவீடு செய்தால் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறியுள்ளது.

இந்நிலையில் நீர்வள துறையின் முதன்மை தலைமை பொறியாளர் மன்மதன், மதுரை மண்டல தலைமை பொறியாளருக்கு கடந்த பிப். 17 ல் அனுப்பிய உத்தரவில், சின்னமனூர் சின்ன வாய்க்கால் ஆக்கிரமிப்புக்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுத்து அது தொடர்பான தகவலை சின்னமனூர் விவசாய சங்கத்திற்கு தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

தலைமை பொறியாளரின் கடிதத்தை தொடர்ந்து நீர்வளத்துறை ஆக்கிரமிப்புக்களை அகற்றும் நடவடிக்கை சுறுசுறுப்படைந்துள்ளதாக விவசாய சங்க தலைவர் ராஜா தெரிவித்துள்ளார்.

Advertisement