முழுமை பெறாத குடிநீர் திட்டப்பணி; மண்டல கூட்டத்தில் குற்றச்சாட்டு

திருப்பூர்; நான்காவது குடிநீர் திட்ட பணிகள், முழுமை பெறாமல் இருப்பதாக, மண்டல கூட்டத்தில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சியின், 3வது மண்டல கூட்டம், நல்லுார் மண்டல அலுவலகத்தில் நடந்தது. மண்டல தலைவர் கோவிந்தசாமி தலைமை வகித்தார்.

உதவி கமிஷனர் வினோத் முன்னிலை வகித்தார். மண்டலத்துக்கு உட்பட்ட 15 வார்டுகளில் நிலவும் பிரச்னைகள் குறித்து கவுன்சிலர்கள் பேசினர்.கவுன்சிலர் காந்திமதி (தி.மு.க.,) பேசுகையில், ''நான்காவது குடிநீர் திட்ட பணிகள், சரியான பொருட்கள் இல்லாமலும், ஆட்கள் இல்லாமல் முழுமை பெறாமல் இருக்கின்றன.

இத்திட்டத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர இயலவில்லை. நான்காவது திட்டத்தில், குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்காத நபர்களுக்கும், இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. முறையாக வரி விதிக்கப்பட்ட கட்டடத்துக்கு, 'டிபாசிட்' பெற்ற பிறகே, இணைப்பு வழங்க வேண்டும். தாராபுரம் ரோட்டில், விபத்துக்களால் சேதமான சென்டர் மீடியன் தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும்,'' என்றார்.

கவுன்சிலர் கண்ணப்பன் (அ.தி.மு.க.,) பேசுகையில், ''மசூதி உள்ள பகுதிகளில், குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நிறைவு பெற்றுள்ளதால், ரோட்டை ரம்ஜான் பண்டிகைக்கு முன்னதாக புதுப்பிக்க வேண்டும்.

காங்கயம் ரோட்டில், 18 குடிநீர் குழாய் கசிவுகளை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீடுகளுக்கு, மூன்று அல்லது நான்கு நாட்கள் இடைவெளியில் குடிநீர் சப்ளை செய்ய வேண்டும். இருள்சூழ்ந்த பகுதிகளில் புதிய தெருவிளக்கு வேண் டும். பண்டிகை நாட்களில் மசூதிகளுக்கு, லாரிகள் மூலம் தேவையான அளவு தண்ணீர் வழங்க வேண்டும்,'' என்றார்.

Advertisement