நகராட்சி கூட்டத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., 'மோதல்'

அவிநாசி; திருமுருகன்பூண்டி நகராட்சி கூட்டத்தில், தனது வார்டு புறக்கணிக்கப்படுவதாக அ.தி.மு.க., கவுன்சிலர் எழுப்பியதையடுத்து, தி.மு.க., - அ.தி.மு.க., கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

திருமுருகன்பூண்டி நகராட்சி கூட்டம் நேற்று நகராட்சி தலைவர் குமார் தலைமையில் நடந்தது.கவுன்சிலர் லதா (அ.தி.மு.க.,) பேசுகையில், ''எனது 17வது வார்டை புறக்கணிக்கின்றனர். நகராட்சி அந்தஸ்து பெற்றதில் இருந்து எந்த பணியும் நடைபெறவில்லை. ஆளும் கட்சி கவுன்சிலர்கள் வார்டுக்கு மட்டும் தான் பணிகள் அதிகம் நடக்கிறது. எனது வார்டுக்கு செய்யக் கூடாது என தலைவர் முடிவெடுத்து விட்டார்,'' என்று குற்றஞ்சாட்டினார். தி.மு.க., கவுன்சிலர்கள் குறுக்கிட, அ.தி.மு.க., கவுன்சிலர்களும் பதிலுக்கு பேச கடும் வாக்குவாதம் ஏற்பட்டு களேபரம் நிலவியது.

நகராட்சி தலைவர் பேசுகையில், ''அனைத்து கவுன்சிலர்களுக்கும், சமமாகவே நிதி ஒதுக்கப்பட்டு எந்தெந்த பணிகளை வார்டு மக்களுக்கு பிரதானமாக செய்ய வேண்டுமோ அதனை செய்து தந்துள்ளோம். யாருக்கும் பாரபட்சம் பார்ப்பதில்லை'' என்றார்.

பாரதி (தி.மு.க.,): -கொசு ஒழிப்பு மருந்து வார்டு பகுதிகளில் அடித்து பல மாதங்கள் ஆகிவிட்டது. கொசு அதிகரித்துள்ளது.

சுப்ரமணியம் (மா.கம்யூ.,): மயானத்தைச் சுற்றிலும் கம்பி வேலிகள் அமைத்து பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். தற்போது, குடிநீர் அழுத்தம் குறைவாக வருவதாக கூறி 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வினியோகிக்கின்றனர். சீராக வினியோகிக்க நடவடிக்கை தேவை. பத்தாவது வார்டு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையப்பணிகள் துவங்கியுள்ளன. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது.

யுவராஜ் (தி.மு.க.,): மயானத்துக்கு செல்லும் வழியில் தெரு விளக்குகள் இல்லை. இரவில் உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்பவர்களுக்க சிரமம் நேர்கிறது. நகராட்சி சார்பில், அமரர் ஊர்தி வாகனம் வாங்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தர வேண்டும்.

குமார் (நகராட்சி தலைவர்): பல்வேறு திட்டங்களுக்காக, 10 கோடி ரூபாய் அளவில் நிதிகள் ஒதுக்கி தர நகராட்சி சார்பில் கேட்டுள்ளது. விரைவில் அனைத்து வார்டு பகுதிகளிலும் நிலுவையில் உள்ள பணிகள் செய்து தரப்படும். நாய்கள் பிடிக்கும் பணியை விரைந்து முடிக்க கேட்டுள்ளோம்.

---

திருமுருகன்பூண்டி நகராட்சி கூட்டத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வேறு இடத்தில் பிடித்த நாய்கள் 'தஞ்சம்'

தங்கவேலு (இ.கம்யூ.,) பேசுகையில், ''நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. வேறு பகுதியில் பிடித்து கருத்தடை செய்து இங்கு கொண்டு வந்து விட்டு சென்றுள்ளனர். ஏற்கனவே இருக்கும் நாய்களுக்கும் புதிதாக வரும் நாய்களுக்கும் சண்டை ஏற்பட்டு பொதுமக்களையும் துரத்தி அச்சுறுத்துகிறது'' என்றார்.

Advertisement