'நோயாளிக்கான மருத்துவம் -- கடவுளுக்கான தொண்டு'

திருப்பூர்; ''நோயாளிகளுக்கு செய்யப்படும் மருத்துவம், கடவுளுக்கு செய்யப்படும் தொண்டுக்கு ஒப்பானது'' என்று அரசு மருத்துவ கல்லுாரி டீன் முருகேசன், தனது பிரிவு உபசார விழாவின் போது பேசினார்.

திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை 'டீன்'ஆக முருகேசன் கடந்த 2021, மே மாதம் முதல் பணிபுரிந்துவந்தார்.

நேற்று பணி ஓய்வு பெற்றார். பிரிவு உபசார விழா, மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசுகையில், ''மருத்துவமனை வளர்ச்சி திட்டத்துக்கான பணிகளை செவ்வனே, 24 மணி நேரமும் மேற்கொண்ட டீனுக்கு பாராட்டுகள். அடையாறு மருத்துவமனைக்கு அடுத்தபடியாக, திருப்பூரில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கும் பணி சிறப்பாக முருகேசன் காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது,'' என்றார்.

'டீன்' முருகேசன் பேசுகையில், ''நோயாளிக்கு செய்யும் மருத்துவம் கடவுளுக்கு செய்யும் தொண்டு போன்றது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மருத்துவமனையை சுகாதாரமாக வைத்துக்கொண்டாலே, மருத்துவமனை துாய்மையாக இருக்கும். மருத்துவ மாணவர்கள், நிறைய கற்றுக்கொண்டு, மருத்துவத்துறையில் சாதிக்கவேண்டும்,'' என்றார்.

ஓய்வு பெற்ற டீனுக்கு மருத்துவ கல்லுாரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மருத்துவ பணியாளர்கள், மருத்துவ மாணவர்கள் பூங்கொத்து அளித்தும், மாலை அணிவித்தும், அவரை வழியனுப்பி வைத்தனர். திருப்பூர் ரோட்டரி பொதுநல அறக்கட்டளை தலைவர் டாக்டர் முருகநாதன், மருத்துவமனை கண்காணிப் பாளர் உமாசங்கர், இருப்பிட மருத்துவ அலுவலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மருத்துவக்கல்லுாரிக்கு பொறுப்பு 'டீன்' ஆக, மருத்துவ கல்லுாரி துணை முதல்வர் பத்மினி பொறுப்பேற்றுக்கொண்டார்.

Advertisement