'லஞ்சப்பண விவகாரம் விசாரணை நடக்கிறது'

திருப்பூர்; ஊத்துக்குளி தாலுகாவில், லஞ்சப்பணம் காணாமல் போன விவகாரத்தை, லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரிக்க வேண்டுமென, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், நஞ்சராயன் குளம் பாதுகாப்பு சங்க தலைவர் கிருஷ்ணசாமி கொடுத்த மனு:

ஊத்துக்குளி தாலுகா அலுவலகத்தில், அலுவலர் ஒருவர் வாங்கிவைத்திருந்த 16 ஆயிரம் ரூபாய் லஞ்சப்பணம் காணாமல் போன விவகாரம் சமூக வலைதளங்களில் பரவியது. இதுதொடர்பாக கடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. மாறாக, லஞ்ச குற்றச்சாட்டுக்கு ஆளான நபர், கலெக்டர் அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆர்.டி.ஓ., விசாரணையில் நீதி கிடைக்காது என்பதால், லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு விசாரணையை மாற்ற வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசுகையில், ''குற்றச்சாட்டுக்கு ஆளான நபரை, உடனடியாக இடமாற்றம் செய்வது வழக்கம்; அதன்படி இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது,'' என்றார்.

Advertisement