'வளம் குன்றா உற்பத்தி சூழியல்; முதன்மை மையமாக திருப்பூர்'

திருப்பூர்; ''வளம் குன்றா உற்பத்தி சூழியலில் திருப்பூர் முதன்மை மையமாக திகழ்கிறது'' என்று கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு 'பூஜ்ஜிய குறைபாடு; பூஜ்ஜிய விளைவு' சான்றிதழ் வழங்கும் திட்டத்தை துவங்கியது.

பூஜ்ஜிய குறைபாடு என்பது உற்பத்தி செயல்முறையில் குறைபாடுகளைத் தடுப்பதும் நீக்குவதும் ஆகும். பூஜ்ஜிய விளைவு என்பது, உயர்தர விளைவுகளை அடைவதாகும்.

'பூஜ்ஜிய குறைபாடு; பூஜ்ஜிய விளைவு' குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அரங்கில் நேற்று நடந்தது.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க இணைச் செயலாளர் குமார் துரைசாமி பேசியதாவது:

பிரதமர் மோடி, பூஜ்ஜிய குறைபாடு; பூஜ்ஜிய விளைவை தொடர்ந்து வலியுறுத்திவருகிறார். வளம் குன்றா உற்பத்தி சூழியல், உலகளாவிய பேசுபொருளாக மாறியுள்ளது. இதில், திருப்பூர் முதன்மை மையமாக திகழ்கிறது.

'பூஜ்ஜிய குறைபாடு; பூஜ்ஜிய விளைவு', நமது வர்த்தகத்தை மேம்படுத்த கைகொடுக்கும். நமது போட்டி நாடுகளான வங்கதேசம், இலங்கை, வியட்நாம் நாடுகளைவிட, நம் நாட்டில், ஆடை உற்பத்தியில் கழிவு சதவீதம் அதிகமாக உள்ளது. கார்பன் வெளியேற்றம், தொழிற்சாலை கழிவு வெளியேற்றங்களை குறைக்கவேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

ஆர்.எஸ்.ஜெ., இன்ஸ்பெக் ஷன் வணிக மேம்பாட்டு நிர்வாகி பவித்ரா, ஆர்.எஸ்.ஜெ., திட்டம், ராம்ப் திட்டம், 'ஜெட்' (பூஜ் ஜிய குறைபாடு; பூஜ்ஜிய விளைவு) திட்டம்,குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களின் நிலைகள், அவற்றின் பயன்கள் மற்றும் விண்ணப்பிப்பது குறித்து விளக்கம் அளித்தார்.

ஏற்றுமதியாளர் சங்க செயற்குழு உறுப்பினர் ஆனந்த் மற்றும் ஏற்றுமதியாளர்கள் பங்கேற்றனர். மாவட்ட தொழில்மைய உதவி இயக்குனர் தாரிக் நன்றி கூறினார்.

தொழில்முனைவோர்

பயன்படுத்த அழைப்பு

திருப்பூரில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களே அதிக எண்ணிக்கையில் உள்ளன. அரசின் பல்வேறு திட்டங்களை, தொழில்முனைவோர் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை உலக அரங்கில் மிளிரச் செய்ய, அரசு பூஜ்ஜிய குறைபாடு; பூஜ்ஜிய விளைவு சான்று வழங்குகிறது.

- கார்த்திகைவாசன்,

பொது மேலாளர், மாவட்ட தொழில்மையம்.

Advertisement