காய்கறி நர்சரி அமைக்க வலியுறுத்தல்

கம்பம்: காய்கறி நாற்றுகள் வாங்குவதற்கு தோட்டக்கலைத்துறை கம்பம் அல்லது சின்னமனூரில் நர்சரி துவக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தேனி தோட்டக்கலை மாவட்டமாகும். இங்கு காய்கறி பயிர்கள், பழப்பயிர்கள் அதிக பரப்பில் சாகுபடியாகிறது. தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு கத்தரி, தக்காளி, மிளகாய் நாற்றுக்கள் மானியமாக தரப்படுகிறது.

இந்த நாற்றுகளை பெற கூடலூர் முதல் சின்னமனூர் வரையிலான விவசாயிகள், குறைந்தது 50 கி.மீ.,துாரத்தில் உள்ள பெரியகுளம் தோட்டக்கலை பண்ணைக்கு செல்ல வேண்டும்.

நாற்றுகளை எடுத்துவர வாகனங்களுடன் செல்ல வாடகை ரூ.3 ஆயிரம் வரை ஆகும். இதனால் விவசாயிகள் அவதிப்பட்டனர்.இப் பிரச்னைக்கு தீர்வு காண சில ஆண்டுகளுக்கு முன் சின்னமனூர் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் பசுமைக்குடிலில் நர்சரி அமைக்க தோட்டக்கலைத்துறை திட்டமிட்டது. ஆனால் அப்பணிகள் நடைபெறவில்லை.

விவசாயிகள் நாற்றுக்களை வாங்குவதற்கு பெரியகுளம் செல்வது தொடர்கதையாகி வருகிறது. நுகர்பொருள் வாணிப கிட்டங்கி வளாகத்தில் போதிய அளவு இடம் உள்ளது.

எனவே தோட்டக்கலைத்துறையினர் கம்பம் அல்லது சின்னமனூரில் நர்சரி துவக்க வேண்டும். இதன்மூலம் சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் வட்டார விவசாயிகள் நாற்றுகள் வாங்க பெரியகுளம் செல்ல தேவையில்லை. பயண நேரம், செலவு, வாகன வாடகை மிச்சமாகிறது.

Advertisement