சிங்கம்புணரிக்கு புறவழிச்சாலை; நெரிசல் குறையுமா என மக்கள் எதிர்பார்ப்பு

காரைக்குடி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இப்பேரூராட்சியில் நாளுக்கு நாள் மக்கள் நெருக்கம், வாகன போக்குவரத்து பெருகி வருகிறது.

இச்சாலை வழியாகவே மேற்கு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான சரக்கு வாகனங்கள் காரைக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்கிறது.

சிங்கம்புணரி பேரூராட்சியானது குறுகிய எல்லைக்குள் நகர்மயமாகி வருவதால் அனைத்து தரப்பினரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

இப்பேரூராட்சிக்கு வெளியே புறவழிச்சாலை அமைக்க பொதுமக்கள் மத்தியில் தொடர் கோரிக்கை இருந்து வருகிறது. குறிப்பாக நகருக்கு தெற்கே செல்லும் பெரியாறு நீட்டிப்புக்கால்வாயின் இருபுறமும் சாலை அமைக்க தலா 20 அடி இடம் ஒதுக்கப்பட்டது.

ஒரு புறம் தனியார் ஆக்கிரமிப்பு, இன்னொரு புறம் சீமைக்கருவேல மரங்கள் என அப்பாதைகளை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. குறிப்பிட்ட தூரத்திற்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஒரு புறம் மட்டும் தார்சாலை அமைக்கப்பட்டது. ஆனால் சிவபுரிபட்டி ஊராட்சி எல்லையில் ஆட்கள் நடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு சாலை மோசமாக உள்ளது.

இச்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயின் இருபுறமும் தடுப்புச்சுவர்களுடன் தார்சாலை அமைத்து தனித்தனி ஒரு வழிப்பாதையாக மாற்றினால் நகருக்குள் நெரிசல் குறையும்.

நகருக்கு வடக்கே தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நான்குவழி பைபாஸ் சாலை அமைக்க ஆய்வு நடத்தப்பட்டுள்ள நிலையில், அத்திட்டத்தையும் விரைந்து நிறைவேற்ற மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement