ரகானே புதிய கேப்டன்: ஐ.பி.எல்., கோல்கட்டா அணிக்கு

புதுடில்லி: ஐ.பி.எல்., கோல்கட்டா அணிக்கு புதிய கேப்டனாக ரகானே நியமிக்கப்பட்டார்.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) 18வது சீசன் வரும் மார்ச் 22ல் கோல்கட்டாவில் துவங்குகிறது. இதில் இடம் பெற்றுள்ள கோல்கட்டா அணிக்கு கேப்டனாக ஸ்ரேயாஸ் இருந்தார். இவரது தலைமையில் கோல்கட்டா அணி, கடந்த ஆண்டு கோப்பை வென்றது. இருப்பினும் வீரர்கள் 'மெகா' ஏலத்தில், கோல்கட்டா அணியில் இருந்து ஸ்ரேயாஸ் விடுவிக்கப்பட்டார். இவரை, பஞ்சாப் அணி தட்டிச் சென்றது.

இந்நிலையில் புதிய கேப்டனை தேர்வு செய்ய கோல்கட்டா அணி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக, ரகானே, ரிங்கு சிங், வெங்கடேஷ் ஐயர் பெயர்கள் ஆலோசிக்கப்பட்டன. முடிவில் ரகானே, புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார். வீரர்கள் ஏலத்தில் இவரை, ரூ. 1.5 கோடிக்கு கோல்கட்டா அணி வாங்கியது.


கடந்த ஆண்டு நடந்த சையது முஷ்தாக் அலி 'டி-20' டிராபியில் பேட்டிங்கில் அசத்திய ரகானே, 9 போட்டியில், 469 ரன் (5 அரைசதம்) குவித்து மும்பை அணி கோப்பை வெல்ல உதவினார். தவிர இவர், தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
கடந்த 2019ல் ராஜஸ்தான் அணியில் இருந்து கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பாதியில் விலகியதால், மீதமுள்ள போட்டிகளுக்கு ரகானே அணியை வழிநடத்தினார். கடந்த 2020-21ல் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடருக்கு கேப்டனாக செயல்பட்ட இவர், சமீபத்தில் முடிந்த ரஞ்சி கோப்பையில் மும்பை அணியை அரையிறுதி வரை அழைத்துச் சென்றார்.

துணை கேப்டனாக வெங்கடேஷ் ஐயர் அறிவிக்கப்பட்டார்.
இதுகுறித்து ரகானே கூறுகையில், ''ஐ.பி.எல்., அரங்கில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான கோல்கட்டா அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. அணியில் திறமையான வீரர்கள் இருப்பதால், 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ள முயற்சிப்போம்,'' என்றார்.

Advertisement