குடிநீராக பயன்படும் பாசன நீர்

கொட்டாம்பட்டி: கச்சிராயன்பட்டி வடக்கு தெருவில் குடிநீர் தட்டுப்பாடால், விவசாயத்துக்கு பயன்படுத்தும் மோட்டார் தண்ணீரை பயன்படுத்துவதால் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி வருகிறது.

இத்தெரு மக்களுக்காக சில ஆண்டுகளுக்குமுன் போர்வெல் அமைத்து பிளாஸ்டிக் தொட்டி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. போதிய பராமரிப்பு இல்லாததுடன், மோட்டாரும் பழுதானதால் சரி செய்ய கொண்டு சென்றனர். இதுவரை ஊராட்சி நிர்வாகம் மோட்டாரை பழுது நீக்கி தண்ணீர் தரவில்லை. தற்போது தொட்டியையும் காணவில்லை.

அப்பகுதி மக்கள் கூறியதாவது:

குடிநீர் சப்ளை செய்யாததால் சிலர் ஒரு குடம் நீரை ரூ.15 க்கு வாங்குகின்றனர். ஏழை, எளியோர்கள் பல கி.மீ., சென்று மோட்டார் தண்ணீரை பிடித்து குடிநீராக பயன்படுத்துகின்றனர். தண்ணீருக்காக அலைந்து திரிவதால் குறித்த நேரத்திற்கு பள்ளிகள், பணிகளுக்கு செல்ல முடியவில்லை. மேலும் சுகாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.மோட்டாரை பழுது நீக்க வலியுறுத்தி கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றியும், ஒன்றிய அதிகாரியிடம் மனு கொடுத்தும் சரி செய்யவில்லை. கலெக்டர் தலையிட்டு குடிநீர் வழங்க வேண்டும் என்றனர்.

ஊராட்சி செயலர் சசிகுமார் கூறுகையில், ஒரு வாரத்திற்குள் மோட்டார் பழுது நீக்கி தண்ணீர் சப்ளை செய்யப்படும் என்றார்.

Advertisement