தேர்தல் கமிஷன் தவறை திருத்த 24 மணி நேர கெடு விதித்த மம்தா!

1


புதுடில்லி: “தேர்தல் கமிஷன் தன் தவறை, 24 மணி நேரத்திற்குள் ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லையேல், கூடுதல் ஆதாரங்களை இன்று காலையில் வெளியிடுவோம்,” என, திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,க்கள் குழு தலைவர் டெரக் ஓ பிரையன் கூறினார்.


மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், முதல்வர் மம்தா நேற்று முன்தினம் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, பா.ஜ.,வுக்கு தேர்தல் கமிஷன் மறைமுகமாக உதவி வருகிறது.


மேற்கு வங்கத்தில் உள்ள வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண் போலவே, குஜராத் மற்றும் ஹரியானாவில் உள்ள வாக்காளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற போலி வாக்காளர்கள் வாயிலாக வெற்றி பெற, பா.ஜ., முயற்சிக்கிறது. இவ்வாறு கூறினார்.

அதற்கு பதிலளித்து, தேர்தல் கமிஷன் வெளியிட்ட செய்தித்குறிப்பில், 'ஒரே வாக்காளர் புகைப்பட அடையாள எண் இருப்பதால் மட்டும், பிற மாநிலத்தவர் மற்றொரு மாநில ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்து விட முடியாது. தொகுதி மறுசீரமைப்பின் போது, இதுபோல நடக்க வாய்ப்புள்ளது. எனினும், தவறை திருத்திக் கொள்கிறோம்' என தெரிவித்திருந்தது.

இந்த விவகாரத்தை டில்லியில் நேற்று மீண்டும் கிளப்பிய, திரிணமுல் காங்., ராஜ்யசபா எம்.பி., டெரக் ஓ பிரையன் கூறியதாவது: தேர்தல் கமிஷன், தான் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு பிரச்னையை சரிசெய்ய வேண்டும். அதற்காக அந்த அமைப்பிற்கு, 24 மணி நேரம் கெடு விதிக்கிறோம்.

இல்லையெனில், இன்று காலை மேலும் பல ஆதாரங்களை வெளியிடுவோம். பா.ஜ., ஆளும் மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு, மேற்கு வங்கத்தில் புகைப்பட அடையாள அட்டை எண் வழங்கப்பட்டது என்பதை விளக்குவோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement