குழந்தையின்மை சிகிச்சைக்கு யோகா

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையின் யோகா மற்றும் இயற்கை நல்வாழ்வு துறை சார்பில் பெண்களுக்கு குழந்தையின்மை சிகிச்சைக்காக யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.

மன அழுத்தம், உடல் உழைப்பின்மை, உடற்பயிற்சி செய்யாமை, சத்தில்லா கலோரி நிறைந்த உணவுகளை உண்ணுதல், உடல் எடை கூடுதல், பி.சி.ஓ.டி., ஹைப்போ தைராய்டிசம் போன்ற 80 சதவீத பிரச்னைகள் குழந்தைப் பேறின்மையை ஏற்படுத்துகின்றன. வாழ்க்கை முறையை மாற்றியமைத்தால் இதிலிருந்து விடுபடலாம் என்கிறார் துறைத்தலைவர் நாகராணி நாச்சியார்.

அவர் கூறியதாவது:

இத்துறை வார்டில் மாதம் 30 முதல் 40 பெண்கள் குழந்தைப் பேறின்மை சிகிச்சைக்காக வருகின்றனர். மகப்பேறு வார்டில் திங்கள் தோறும் குழந்தைப்பேறில்லா 30 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்கள் சராசரியாக 40 பேர் வருகின்றனர். இவர்களில் பலர் வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்பட்ட தற்காலிக மகப்பேறின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 சதவீதம் பேருக்கு கர்ப்பப்பை குழாயில் அடைப்பு, இதய பிரச்னை, சிறு வயதிலேயே சர்க்கரை நோய் போன்ற பிரச்னைகள் ஏற்படும் போது மருத்துவ சிகிச்சைதான் தீர்வாகும்.

இங்கு சிகிச்சைக்கு வருவோருக்கு வயிற்று மசாஜ், வயிற்றில் மண் 'பேக்கிங்' சிகிச்சை, ஈரத்துணி சிகிச்சை அளிக்கிறோம். இதன் மூலம் கர்ப்பப்பை குளிர்ந்து ரத்தஓட்டம் அதிகரிக்கும்.

எளிய முறையில் ஐந்து வகை யோகா பயிற்சிகளை கற்றுத் தருகிறோம். யோகா பயிற்சி பெறும் போது உடலும் மனதும் அமைதியடையும். அனைத்து உறுப்புகளுக்கும் ரத்தஓட்டம் அதிகரிக்கும்.

உடல் செல்களில் ஆக்சிஜன் அளவு கூடும்.

எடை குறைவதோடு ஹார்மோன் பிரச்னைகள் குறையவும் வாய்ப்புள்ளது.

வாக்கிங் செல்ல இடவசதியுடன் துணையும் அவசியம் என பெண்கள் எதிர்பார்ப்பர். யோகா பயிற்சியை வீட்டிலிருந்தபடி செலவின்றி செய்யலாம்.

இத்துடன் உணவு முறையும் முக்கியம். தினமும் ஒரு வேளையாவது பச்சை காய்கறி, பழங்கள், தேங்காய் சாப்பிட வேண்டும்.

இந்த முறைகளை கடைபிடித்தால் குழந்தையின்மை பிரச்னை சரியாகும் என்றார்.

Advertisement