வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்


திருநெல்வேலி: ஜமைக்கா நாட்டில் சூப்பர் மார்க்கெட் கடையில், 2024ம் ஆண்டு டிச.18ல் கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இறந்த திருநெல்வேலி மீனாட்சிபுரத்தை சேர்ந்த வாலிபர் விக்னேஷ் உடல் இன்று (மார்ச் 04) சொந்த ஊர் கொண்டு வரப்பட்டது.


மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்றான ஜமைக்கா நாட்டில், பிராவிடன்ஸ் தீவில் ஜேகே புட் என்ற சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இங்கு, திருநெல்வேலி மாவட்டம் டவுனை சேர்ந்த விக்னேஷ், சுந்தரபாண்டி, சுடலை மணி, ராஜாமணி ஆகிய 4 பேர் பணியாற்றி வந்தனர். இந்த சூப்பர் மார்க்கெட்டை சுரண்டையைச் சேர்ந்த சுபாஷ் அமிர்தராஜ் என்பவர் நடத்தி வருகிறார்.

கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி இந்திய நேரப்படி, அதிகாலை 1.30 மணி அளவில் கொள்ளையர்கள் சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து, பணத்தை கொள்ளையடித்து விட்டு, துப்பாக்கிச்சூடு நடத்தினர். விக்னேஷ் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



இறந்த, விக்னேஷின் உடலை உடனடியாக தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று அவரது உறவினர்கள் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கார்த்திகேயனிடம் மனு அளித்து இருந்தனர். இவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் கோரிக்கை விடுத்தார்.


இந்நிலையில், இன்று (மார்ச் 04) விக்னேஷ் உடல் சொந்த ஊர் கொண்டு வரப்பட்டது. அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

Advertisement