தரிசன டிக்கெட் இருந்தால் தான் திருப்பதி தேவஸ்தான அறைகளில் தங்க அனுமதி!

திருப்பதி: தரிசன டிக்கெட் இருந்தால் தான் திருப்பதி தேவஸ்தான அறைகளில் தங்க அனுமதி அளிக்கப்படும் என்று தேவஸ்தானம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.



திருமலையில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக மட்டும் 7500 தங்கும் அறைகள் உள்ளன. பல பிரிவுகளாக இந்த அறைகள் பிரிக்கப்பட்டு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் இடைத்தரகர்கள் மூலம் அறைகள் ஒதுக்கப்பட்டு மோசடிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.


இந் நிலையில், மோசடிகளை தடுக்க திருப்பதி தேவஸ்தானம் புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இனி வரும் காலங்களில் அறைகள் பெற்றுக் கொள்ள வேண்டுமானால் ஆதார் அட்டையுடன், தரிசன டிக்கெட்டுகளும் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.


இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில், ' இந்த நடைமுறை மூலம், தரிசனம் முடிந்த பின்னர் பக்தர்கள் உடனடியாக அறைகளை காலி செய்ய முடியும்.


அதன் பின்னர் மற்ற பக்தர்களுக்கு அறைகள் ஒதுக்கப்படும். தேவஸ்தானத்தில் இந்த நடவடிக்கை மூலம், கூடுதல் வருமானமும் ஈட்டப்படும்' என்று கூறினர்.

Advertisement