ஹிந்தியை திணிக்க முயற்சியா? காங்., - பா.ஜ., வாக்குவாதம்

பெங்களூரு:“ஹிந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது,” என, காங்கிரஸ் உறுப்பினர் நயனா கூறியதால், சட்டசபையில் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் கீழ், நேற்று சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் நயனா: மத்திய அரசு, நம் மாநிலத்திற்கு வரி பங்கீட்டை வழங்குவதில் பாகுபாடு காட்டுகிறது. இதனால் மேம்பாட்டுப் பணிகளை எதிர்பார்த்த அளவுக்கு மேற்கொள்ள முடியவில்லை. மத்திய அரசுக்கு நாம் ஒரு ரூபாய் செலுத்தினால் அவர்கள் நமக்கு 15 பைசா திரும்பக் கொடுக்கின்றனர். கர்நாடகாவில் ஹிந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது.

நயனாவின் பேச்சுக்கு பா.ஜ., உறுப்பினர் உமாநாத் கோட்டியான் எதிர்ப்புத் தெரிவித்தார்.

குறுக்கிட்ட காங்கிரஸ் உறுப்பினர் நரேந்திரசாமி: நயனா முதன்முறை எம்.எல்.ஏ., அவருக்கு பேச வாய்ப்புக் கொடுங்கள்.

உமாநாத் கோட்டியான்: எத்தனை முறை வெற்றி பெற்றாலும் பரவாயில்லை. அவர் வரம்புக்குள் பேச வேண்டும்.

கோபம் அடைந்த நயனா குரலை உயர்த்திப் பேசினார். இதனால் பா.ஜ., உறுப்பினர்கள் எழுந்து, நயனாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பதிலுக்கு காங்கிரஸ் உறுப்பினர்களும் கோஷம் எழுப்பியதால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. யார் என்ன பேசுகின்றனர் என்பது தெரியவில்லை.

சபாநாயகர் காதர் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார்.

தொடர்ந்து நயனா: நம் மாநில நலனுக்காக மத்திய அரசு வரி பங்கீட்டை வழங்குவதை, பா.ஜ., உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டும். அடுத்த பட்ஜெட்டிற்குள் மாநிலத்தின் பொருளாதாரம் ஒரு டிரில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் தேவையின்றி வாக்குறுதித் திட்டங்களை விமர்சிக்கின்றனர். ஆனால் ஐக்கிய நாடுகள் சபையே, வாக்குறுதித் திட்டங்களை பாராட்டி உள்ளது.

Advertisement