முதல்வர் நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்டோர் உயிரிழப்பு; தி.மு.க.,வே இழப்பீடு தரவேண்டும்!

9


சென்னை: 'முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்திற்கு, ஆட்களை அழைத்துச் சென்றதில், உயிரிழந்த மூவரின் குடும்பத்திற்கு, தி.மு.க., நிதியில் இருந்து தலா, 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., மாநில செயலர் அஸ்வத்தாமன் வலியுறுத்தி உள்ளார்.


அவரது அறிக்கை: கடந்த பிப்., 22ல் விருதாச்சலம் அருகே, திருப்பெயர் பகுதியில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற, 'பெற்றோரை கொண்டாடுவோம்' நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வலுக்கட்டாயமாக மக்கள் பல்வேறு கிராமங்களில் இருந்து, வாகனங்களில் அழைத்து வரப்பட்டனர்.



அவர்களை அழைத்து வந்த தி.மு.க.,வினர், ஆடு, மாடுகளை போல், லோடு வாகனங்களில் ஏற்றி வந்தனர். பழையப்பட்டினம் கிராமத்தில் இருந்து, டாடா ஏஸ் வாகனத்தில், 30க்கும் மேற்பட்டோரை, அழைத்து வந்தபோது, அந்த வாகனம் பாரம் தாங்காமல், பள்ளத்தில் கவிழ்ந்தது.



அதில் பலரும் படுகாயம் அடைந்த நிலையில், சம்பவத்தன்று குப்புசாமி என்பவர் இறந்து போனார். விபத்தில் காயமடைந்து, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த, வேம்பரசி என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை இறந்து விட்டார்.



தஞ்சை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராதாகிருஷ்ணன் என்பவர், நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். மேலும், இருவர் கவலைக்கிடமாக இருக்கின்றனர். விபத்தில் இறந்து போனோர் குடும்பத்திற்கு, தி.மு.க.,வினர் தலா, 25 லட்சம் ரூபாயை உடனே இழப்பீடாக வழங்க வேண்டும்.



விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு இழப்பீடாக தலா, 10 லட்சம் ரூபாய் உடனே வழங்க வேண்டும். இதை தி.மு.க., நிதியில் வழங்க, அக்கட்சியின் தலைவர் என்ற முறையில் முதல்வர் ஸ்டாலின் ஏற்பாடு செய்ய வேண்டும்.


இந்த கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில், தமிழக பா.ஜ., சார்பில், தி.மு.க.,வை எதிர்த்து, கடலுாரில் பெருந்திரள் ஆர்ப்பாட்டமும், தொடர் போராட்டங்களும் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement