புதுப்பிக்கப்படும் குடிநீர் தொட்டி பேருந்து மோதியதால் சேதம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், நகர பேருந்துகளுக்கான டைம் கீப்பர் அலுவலகம் அருகில், காஞ்சிபுரம் தி.மு.க., -- எம்.எல்.ஏ., எழிலரசன், 2018ம் ஆண்டு, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்த 7 லட்சம் ரூபாய் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் திறக்கப்பட்டது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பயணியர், நடைபாதை, தள்ளுவண்டி வியாபாரிகள், போக்குவரத்து ஊழியர்களும் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய குடிநீரை பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன், குடிநீரை சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்தது. இயந்திரத்தை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், குடிநீர் மையத்தில் தண்ணீர் குடிக்க, தாகத்துடன் வரும் பயணியர், தண்ணீர் இல்லாததால், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

எனவே, கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் குடிநீர் சுத்தகரிப்பு மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், குடிநீர் மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில், சீரமைப்பு பணி நடந்து வருகிறது.

இதில், ஒரு பகுதியாக கட்டடத்திற்கு வர்ணம் தீட்டப்பட்டு, புதிதாக குழாய்கள் அமைக்கப்பட்டு, குடிநீர் பிடிக்கும் குழாயில், துருப்பிடிக்காத ஹேண்ட்வாஷ் பேசின் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குடிநீர் மையம் அருகில், பார்க்கிங் செய்யப்பட்ட அடையாளம் தெரியாத பேருந்து மோதியதில், ஹேண்ட்வாஷ் பேசின் நசுங்கி, சாய்ந்து கிடக்கிறது.

புதுப்பிக்கப்படும் குடிநீர் மையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னரே பேருந்து மோதி, ஹேண்ட் வாஷ்பேசின் சேதமடைந்துள்ளதால், குடிநீர் மையத்தின் பாதுகாப்பும், குடிநீரை பருக வருவோரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.

எனவே, குடிநீர் மையத்தில் சேதமடைந்த ஹேண்ட்வாஷ் பேசினை சீரமைப்பதோடு, குடிநீர் தொட்டி அருகில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement