இருதரப்பு உறவில் அனைத்தையும் ஆலோசித்தோம் பிரிட்டன் அமைச்சரை சந்தித்த ஜெய்சங்கர் மகிழ்ச்சி

லண்டன்: பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாமியுடன் இரண்டு நாட்கள் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், 'இரு தரப்பு உறவின் அனைத்து அம்சங்கள் குறித்தும் ஆலோசித்தோம். இது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது' என, குறிப்பிட்டுள்ளார்.

நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஆறு நாள் பயணமாக, ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன் மற்றும் அயர்லாந்து சென்றுள்ளார். இரு நாடுகளிலும் பல நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். நேற்று முன்தினம் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமரை சந்தித்தார்.

அதைத் தொடர்ந்து, அந்நாட்டின் உள்துறை அமைச்சர் யுவோட்டே கூப்பர், வர்த்தக அமைச்சர் ஜொனாத்தன் ரெலான்ல்ட்ஸ் ஆகியோரையும் சந்தித்தார்.

இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை, கென்ட் மாகாணத்தில் உள்ள 17ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட புகழ்பெற்ற செவனிங் ஹவுசுக்கு தன் மனைவியுடன் ஜெய்சங்கர் வந்து சேர்ந்தார். அவரை பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாமி வரவேற்றார்.

வரலாற்று சிறப்புமிக்க அந்த மாளிகை மற்றும் அதை சுற்றியுள்ள பூங்காக்களை சுற்றி வந்து, இருவரும் நீண்ட நேரம் பேசினர்.

இதைத் தொடர்ந்து நேற்றும் இருவரும் பல மணி நேரம் பேசினர். இந்தியா - பிரிட்டன் இடையேயான தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடுவது தொடர்பான பேச்சு சமீபத்தில் மீண்டும் துவங்கியது.

அதை வேகப்படுத்துவது குறித்து இருவரும் பேசினர். இதைத் தவிர, இரு தரப்பு உறவுகளின் முன்னேற்றம் தொடர்பாகவும் பேசினர்.

ரஷ்யா - உக்ரைன் போர், மேற்காசியாவில் நிலவும் பதற்றம் உள்ளிட்ட சர்வதேச பிரச்னைகள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினர்.

'பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாமியுடன், இரண்டு நாட்கள் நடந்த சந்திப்பு, மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது. இரு தரப்பு உறவில் உள்ள அனைத்து அம்சங்கள் தொடர்பாகவும் விரிவாக பேசினோம்.

'குறிப்பாக தாராள வர்த்தக ஒப்பந்த முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது' என, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

Advertisement