தமிழக விவசாயிகளுக்கு நல்ல செய்தி: மக்காச்சோளம் மீதான செஸ் வரி வாபஸ்

8

சென்னை: தமிழகத்தில் மக்காச்சோள வர்த்தகம் மேற்கொள்ள தற்போதுள்ள ஒரு சதவீத செஸ் எனப்படும் சந்தை வரியை செலுத்துவதிலிருந்து விலக்களித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.


தமிழகத்தில் 40 விதமான வேளாண் விளை பொருட்களுக்கு, 1 சதவீத செஸ் எனப்படும் சந்தை வரி விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 'அறிவிக்கை' செய்யப்பட்ட வேளாண் பொருட்களுக்கு, அதன் விற்பனை மதிப்பில் 1 சதவீத செஸ் - சந்தை வரி விதிக்கப்படுகிறது.

ஈரோடு, திருப்பூர், கோவை, நாகை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில், மக்காச்சோளத்துக்கு 'செஸ்' வசூலிக்கப்பட்டு வருகிறது.
கடந்த டிச., 17ம் தேதி முதல் நாமக்கல், சேலம், கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், மதுரை, பெரம்பலூர், தேனி, திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், ராமநாதபுரம், நெல்லை, அரியலூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கரூர், தென்காசி, தூத்துக்குடி, திருப்பத்தூர், திருவள்ளூர், விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்களில், மக்காச்சோளத்துக்கு 1 சதவீத செஸ் வசூலிக்க, வேளாண் உற்பத்திப் பொருட்கள் துறை உத்தரவிட்டுள்ளது.

இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சிகள் திட்டமிட்டு வந்தன. வரியை ரத்து செய்ய வேண்டும் என பல கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர், அந்த ஒரு சதவீதம் செஸ் வரி (சந்தைக்கட்டணம்) ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.


விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற கருத்துகளை ஆராய்ந்து அதற்கேற்ப 1987-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தை (முறைப்படுத்துதல்) சட்டம் பிரிவு 9(1)(d)-ன் படி
வெளியிடப்பட்ட மக்காச்சோளத்திற்கான அறிவிக்கை தமிழகத்தின் அனைத்து விற்பனைக்குழு பகுதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதற்கான அரசிதழ் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement