திருமண வரவேற்பு, விருந்து நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்கு தடை: கேரள உயர் நீதிமன்றம் யோசனை

9


கொச்சி: 'திருமண விருந்துகளில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்தக் கூடாது; பிளாஸ்டிக்கை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'என, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமண விருந்துகளில் உணவு பரிமாறும்போது, சில்வர் டம்ளர்களில் தண்ணீர் வைப்பது வழக்கொழிந்து போய்விட்டது. தற்போது, திருமணம் மற்றும் அதிகமானோர் கூடும் நிகழ்ச்சிகளில், அதில் பங்கேற்பவர்கள் அருந்துவதற்காக பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரை தருவது வழக்கமாகி விட்டது. இந்நிலையில், பிளாஸ்டிக் தொடர்பான வழக்கு ஒன்றில் கேரள உயர் நீதிமன்றம் அதிரடியான கருத்துகளை தெரிவித்தது.

நீதிபதிகள் கூறியதாவது:




* திருமண வரவேற்பு, விருந்து, முக்கிய நிகழ்வுகள் போன்றவற்றில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் வழங்குவதை தவிர்க்க வேண்டும்.


* அதற்கு பதில், கண்ணாடி டம்ளர்களை பயன்படுத்தலாம். மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்கை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


* நுாற்றுக்கும்அதிகமானோர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், பிளாஸ்டிக் பயன்படுத்த, உள்ளூர் அரசு அமைப்பிடம் இருந்து லைசன்ஸ் பெறும் முறையை கொண்டு வர வேண்டும்.


* மலைப் பிரதேசங்களிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டால், இயற்கையை அழித்து வருகிறோம். ரயில்வே துறையும்,பிளாஸ்டிக் குப்பை கழிவுகளில் பொறுப்பில்லாமல் இருக்கிறது.


* தண்டவாளங்களை சுத்தமாக வைத்திருப்பது, ரயில்வே துறையின் பொறுப்பு.


* அதில், குப்பை சேராமல் தடுப்பதோடு, தண்டவாளங்களை சுத்தமாக வைத்திருக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement