சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி சாம்பியன்; 3வது முறையாக மகுடம் சூடியது

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி பைனலில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை இந்திய அணி கைப்பற்றியது.
துபாயில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு இந்திய பவுலர்கள் சிம்மசொப்பனமாக திகழ்ந்தனர். இதனால், அந்த அணியால் ரன்களை குவிக்க முடியாமல் திணறியது. மிட்செல் (63), பிரேஸ்வெல் (53 நாட் அவுட்), ரச்சின் ரவீந்திரா (37), பிலிப்ஸ் (34) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவர்கள் முடிவில் 251 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஷமி, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து, 252 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, கேப்டன் ரோகித் ஷர்மா, கில் ஜோடி சிறப்பாக ஆடி வருகிறது. ரோகித் ஷர்மா, சிக்சர்களும், பவுண்டரிகளுமாக பறக்க விட்டார். இதனால், 41 பந்துகளில் அவர் அரைசதம் அடித்தார். 17 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 100 ரன்கள் குவித்தது.

அதன்பிறகு ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்ஷர் படேல் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. இதனால், இந்திய அணி மெல்ல மெல்ல வெற்றியை நெருங்கியது. அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 48 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து, அக்ஷர் படேலும் 29 ரன்னில் அவுட்டானார். தற்போது, வெற்றியை நோக்கி இந்திய அணி மெல்ல மெல்ல முன்னேறியது.
இறுதியில் கே.எல். ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில், ஒரு ஓவர் மீதம் இருந்த நிலையில் வெற்றி பெற்றது. கே.எல். ராகுல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் எடுத்திருந்தார்.
இதன்மூலம், 3வது முறையாக இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. ரோகித் ஷர்மா தலைமையில் இந்திய அணி அண்மையில் டி20 உலகக்கோப்பையை வென்றிருந்தது. தற்போது, சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றுள்ளது.
ஆட்ட நாயகன் விருது
இந்த போட்டியில் 76 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய கேப்டன் ரோகித் சர்மாவிற்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
தொடர் நாயகன்
தொடர் நாயகன் விருது, நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திராவிற்கு வழங்கப்பட்டது.




