கரூர் மாவட்டத்தில் 20 இடங்களில்நீர் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு


கரூர் மாவட்டத்தில் 20 இடங்களில்நீர் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு


கரூர்:கரூர் மாவட்டத்தில், நீர் பறவை கணக்கெடுப்பு பணி, 20க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்தது. தமிழகத்தில் காப்புக்காடுகள் மற்றும் காப்புக்காடுகளுக்கு வெளியிலும் அதிக எண்ணிக்கையிலான ஈர நிலங்கள் (நீர்நிலைகள், தடுப்பாணைகள், ஏரிகள், குளங்கள் குட்டைகள்) காணப்படுகின்றன. இவைகளில் பல்வேறு வகையான பறவை இனங்கள் தங்கியும், அவ்வப்போது வந்து செல்வதும் வழக்கமாக கொண்டுள்ளன. இதில் அரியவகை இனங்கள் காணப்பட்டால், அதனை அழிவிலிருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
நடப்பாண்டில், தமிழகம் முழுவதும், வனத்துறை மூலம், இரண்டு கட்டங்களாக பறவைகள் கணக்கெடுப்பு பணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஈர நிலப்பகுதிகளிலும், இரண்டாம் கட்டமாக நிலபரப்புகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, கரூர் மாவட்டத்தில், காப்புக்காடுகளுக்கு வெளியில் உள்ள ஈர நிலப்பகுதிகளான காவிரி, அமராவதி உள்பட நீர்நிலைகளில், 20க்கும் மேற்பட்ட இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இதில், மாவட்ட வன அலுவலர் சண்முகம் தலைமையில் தொடங்கி உள்ளது. வனத்துறையுடன் இணைந்து பறவை ஆர்வலர், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள் என, 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இப்பகுதியில், நீர் காகம், கருப்பு வெள்ளை மீன்கொத்தி, வெண்மார்பு மீன்கொத்தி, சிகப்பு மூக்கு ஆள்காட்டி, நத்தைகுத்தி நாரை, கொக்கு, சாம்பல் கொக்கு, மஞ்சள்கால் சட்டி தலை உள்ளான், சீட்டி உள்ளான் வெண்புருவ வாலாட்டி குருவி பனங்காடை, நாரை போன்ற பறவை இனங்களை பார்க்க முடிந்ததாக வன அலுவலர்கள் தெரிவித்தனர். அடுத்த வாரம், 15, 16 ஆகிய நாட்களில் ஈர நிலபரப்புகளில் கணக்கெடுப்பு பணி நடக்கிறது.

Advertisement