கோழி இறைச்சி கழிவால் சீரழியும் சாலமங்கலம் ஏரி

ஸ்ரீபெரும்புதுார் : குன்றத்துார் ஒன்றியம், சாலமங்கலம் ஊராட்சியில், பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் ஏரி உள்ளது.

இந்த ஏரி அப்பகுதியினரின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலையோரம் உள்ள இந்த ஏரியில், செரப்பனஞ்சேரி, வஞ்சுவாஞ்சேரி, சாலமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கிவரும், கோழி இறைச்சி கடைகளில் இருந்து வெளியேறும் இறைச்சி கழிவை, மர்ம நபர்கள் இரவு நேரங்களில் மூட்டைகளில் கட்டி எடுத்து வந்து, இந்த ஏரிக்கரையில் வீசி செல்கின்றனர்.

இவை, ஏரியில் கலந்து, நீர் மாசடைகிறது. மேலும், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால், வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர்.

எனவே, ஏரிக்கரையோரம் தடுப்பு வேலி அமைத்து, இறைச்சி கழிவை கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement